
காட்டிற்குள் வாழும் மிருகங்கள் அவற்றிற்குத் தேவையான உணவுகளை மட்டும் உண்டு நீண்ட காலம் நோயில்லாமல் வாழ்ந்து வருகின்றன. ஆனால் மனிதன் மட்டும் தனது நாக்கின் சுவைக்காக அளவுக்கதிகமான உணவை உட்கொண்டு உடலின் செயல்பாட்டையே மாற்றி வைத்து விட்டான். நோயையும் உருவாக்கிக் கொண்டு விட்டான்.
நம் உடல் இயக்கத்துக்குத் தேவையான ஒவ்வொன்றையும் உடலே சில உணர்வுகளால் அறிவிக்கிறது. அந்த உணர்வுகளை நாம் அலட்சியப்படுத்துவதன் விளைவே நோய்களின் துவக்கமாகி விட்டது. உடலின் இயக்கத்திற்குத் தேவையான உணவு தேவைப்படும் போது பசி எடுக்கிறது. தண்ணீர் தேவைக்குத் தாகம் ஏற்படுகிறது. இதே போல் அந்தத் தேவைகளின் நிறைவுகளையும் சில ஒலிகளின் மூலம் உணர்த்தி விடுகிறது. இந்த உணர்வுகளையும் அறிவிப்புகளையும் நாம் உணர்வதில்லை என்பதை விட உணர்ந்திட விரும்புவதில்லை என்பதே உண்மை.
இந்த உடல் இயக்கத்திற்குத் தேவையான உணவு உண்ணுவதற்காகவும் கழிவை வெளியேற்றுவதற்காகவும் ஒவ்வொரு மனிதனும் கீழ்காணும் சில அடிப்படை விதிகளை மட்டும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
1. நாம் உணவு உட்கொள்ளும் போது உணவை கையில் அள்ளிக் கொள்ளும் அளவை (ஒரு கவளம்) நன்றாக வாயில் வைத்து மென்று விழுங்க வேண்டும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும்படி மெதுவாக சுவைத்து உண்ண வேண்டும். இப்படி 25 முதல் 30 முறை உணவு உட்கொள்ளும் பொழுது வயிற்றுக்குத் தேவையான உணவு கிடைத்தவுடன் ஒரு ஏப்பம் வரும். இந்த ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வயிறு நிறைந்து விட்டது என்பதற்கான அறிவிப்புதான் இந்த ஏப்பம் எனும் ஒலி. இந்த ஒலியைக் கவனிக்கும் நோக்கமும், உணவை உட்கொள்ளும் நோக்கமும்தான் இருக்க வேண்டும். சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி கேட்பது, புத்தகங்கள் வாசிப்பது போன்றவைகளைத் தவிர்க்க வேண்டும்.
2. நாம் உண்ணும் உணவின் வெப்பநிலை உடலின் வெப்பநிலைக்குச் சமமாக இருக்க வேண்டும். அதாவது உணவை மென்று விழுங்கும் போது அதைச் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ நாம் உணரக் கூடாது.
3. நாம் அனைத்து உணவுகளையும் வேகவைத்தோ அல்லது சூடுபடுத்தியோ பயன்படுத்தி வருகிறோம். எனவே காய்கறி, பழங்கள் போன்றவற்றை அப்படியே பச்சையாகச் சாப்பிடுவதைத் தவிர்த்து அதை நீராவியில் இலேசாக வேக வைத்துச் சாப்பிட வேண்டும்.
4. தண்ணீரை அளவுக்கதிகமாக லிட்டர்கணக்கில் குடிப்பதையும் அடிக்கடி குடிப்பதையும் நிறுத்த வேண்டும். தாகம் எடுக்கும் போது மட்டுமே அளவாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
5. ஒருவேளை உணவிற்கும் அடுத்த வேளை உணவிற்கும் குறைந்தது நான்கு மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். இந்த இடைவெளி நேரத்தில் தாகத்திற்காகத் தண்ணீர் குடிக்கலாம். நொறுக்குத் தீனி, காபி, டீ போன்றவற்றை சாப்பிடக் கூடாது.
6. மலம் கழிக்கும் போது அதை முழுமையாக வெளியேற்றி விட வேண்டும். அது வெளியேறும் போது சிறிது எரிச்சல் உணர்வும், சிறிது கருமை கலந்த நிறமும் இருந்தால் இறுதி மலம் வெளியேறி விட்டது என்று உணர்ந்து கொள்ள முடியும்.
- இந்த ஆறு விதிகளை நாம் கடைப்பிடித்து வந்தால் உடலுக்கு உண்ணும் உணவால் வரும் அனைத்து நோய்களிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள முடியும்.
இதுபோல் நம் மனம் ஏதாவது ஒரு விசயத்தை விடாமல் பிடித்துக் கொள்கிறது. அந்த விசயத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல் கடினமாக்கிக் கொள்ளும் போது மனம் சஞ்சலப்படுகிறது. இது நம் மனத்தைப் பாதிப்பதுடன் நம் உடலையும் சேர்த்துப் பாதிக்கிறது. மனத்தை நம் உணர்வுகளைச் சமமாகப் பாவிக்கவும், அதற்காகக் கவலைகளை உருவாக்கிக் கொள்ளாமலிருக்கவும் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம் ஆழ்மனத்திற்கு மருந்துகள் ஏதுமில்லாமல் மூன்று விதமான மனப்பயிற்சி அளித்து நோய்களைக் குணப்படுத்த முடியும். பொதுவான உடல் நலத்திற்கு ஒரு மனப்பயிற்சியும், உடல் வலிகளுக்கு ஒரு மனப்பயிற்சியும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு ஒரு மனப்பயிற்சியும் என்று மூன்று விதமான மனப்பயிற்சிகளை செய்வதன் மூலம் பல நோய்களிலிருந்து நாம் விடுபட முடியும்.
வாழும் தாய் மருத்துவம், ஆழ்மன மருத்துவ ரகசியம் எனும் என்னுடைய இரண்டு தொழில்நுட்பங்களை இரட்டை மாமருத்துவம் எனும் பெயரில் அனைவரும் கடைப்பிடித்தால் நோயில்லா வாழ்வைப் பெற முடியும். மேலும் இந்த மருத்துவத்தால் கீழ்காணும் பயன்களையும் அடைய முடியும்.
1. உணவுச் செலவு மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து விடுகிறது.
2. பணச் செலவில்லாத உணவுமுறை, மனப்பயிற்சி போன்றவைகளைச் செய்து வருவதால் மருந்து, மாத்திரை போன்ற தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக