இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

மனநலம் குன்றிய குழந்தைகளை கருவில் கண்டறியும் சோதனை


மனநலம் குன்றிய குழந்தைகளை கருவிலேயே கண்டறியும் சோதனையை இலவசமாக செய்ய தமிழ்நாடு டவுன்ஸ் சிண்ட்ரோம் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் மரு‌த்து‌வ‌ர் ரேகா ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆண்களின் 23 குரோமோசோம்களும், பெண்ணின் 23 குரோமோசோம்களும் இணைந்து கரு உண்டாகுகிறது. இந்த 23 குரோமோசோம் ஜோடிகளில் 21-வது குரோமோசோம் ஜோடியில் ஏற்படும் குறைபாடு காரணமாக டவுன்ஸ் சிண்ட்ரோம் ஏற்படுகிறது. இ‌ந்தியாவில் பிறக்கும் 600 குழந்தைகளில் ஒரு குழந்தை டவுன்ஸ் சிண்ட்ரோம் எனப்படும் மனநலம் குன்றிய குழந்தையாக உள்ளது.

இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைபாடு, உடல் ஊனம், அதீத வளர்ச்சி போன்ற பல்வேறு வகையான குறைபாடுகளுடன் பிறக்கின்றன. இந்த குறைபாடுள்ள குழந்தைகளை குணப்படுத்த முடியாது. ஆனால் கர்ப்ப காலத்திலேயே பிறக்க போகும் குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் உள்ளதா என்பதை அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் கண்டறிய முடியும்.

இது கு‌றி‌த்து மெடிஸ்கேன் நிறுவனத்தின் இயக்குனர் மரு‌‌த்துவர் சுரேஷ் மரு‌த்துவ‌ர் சுஜாதா ஜெகதீசன் ஆகியோர் சென்னையில் நே‌ற்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், தங்களுக்கு பிறக்க போகும் குழந்தைகள் பற்றி பெற்றோர் எண்ணற்ற கனவுகளில் இருப்பார்கள். சாதாரண ஸ்கேன்கள் மூலம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை ஓரளவே தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, குரோமோசோம் மாற்றத்தால் உருவாகும் டவுன்ஸ் சிண்ட்ரோமை கண்டறிவதற்கு அதிநவீன கருவிகள் தேவைப்படுகின்றன.

முன்பெல்லாம், கரு உருவான 5 மாதங்களுக்கு பிறகுதான் குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறிய முடியும். ஆனால் தற்போது கரு உருவான 11 முதல் 13 வாரங்களுக்குள்ளாகவே குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறியலாம். கரு உண்டான பெண்ணின் ரத்தமாதிரியை எடுத்தும், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலமும் இந்த சோதனை நடத்தப்படும்.

இந்த 2 சோதனைகளில் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு, குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளதா? என்பதை அறியலாம். இதில் திருப்தி ஏற்படாவிட்டால், அடுத்ததாக கருவின் நஞ்சுக்குழாயில் இருந்து திசுக்களை எடுத்து குரோமோசோம் பரிசோதனைக்கு உட்படுத்தி கண்டுபிடிக்க முடியும். இந்த சோதனைக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும் எ‌ன்று கூ‌றினா‌ர்க‌ள்.

அத‌ன்‌‌பி‌ன்‌ன‌ர் பே‌சிய தமிழ்நாடு டவுன்ஸ் சிண்ட்ரோம் அமைப்பின் தலைவர் மரு‌த்துவர் ரேகா ராமச்சந்திரன், டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை பராமரிப்பதற்கு தனிப்பட்ட கவனம் தேவை. அந்த வகையான குழந்தையை பெற்றெடுத்த பிறகு கஷ்டப்படுவதை விட, கருவிலேயே தெரிந்து கொள்வது நல்லது. இந்த வகை குழந்தைகள் மிகவும் அன்பாக இருப்பார்கள். அவர்களுக்குள் திறமைகள் புதைந்து இருக்கிறது. பயிற்சி அளிப்பதன் மூலம் அவற்றை வெளியே கொண்டு வர முடியும்.

சென்னை அபிராமபுரம் 3-வது தெருவில் உள்ள தமிழ்நாடு டவுன்ஸ் சிண்ட்ரோம் அமைப்பை அணுகுபவர்களுக்கு இந்த சோதனையை இலவசமாக செய்து வருகிறோம். எங்கள் அமைப்பு மூலம் இதுவரை 30 பேர் சோதனை செய்துள்ளனர்.

தமிழக அரசும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளது. பொதுவாக, கருவுற்றிருக்கும் அனைத்து தாய்மார்களும் இந்த சோதனைகளை செய்து கொள்வது அவசியமாகும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம் எ‌ன்று ரேகா ராமச்சந்திரன் கூறினார்.

இந்த நவீன சோதனை மூலம் கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் இருப்பது உறுதி செய்யப்பட்ட 2 கர்ப்பிணிப் பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக