இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 பிப்ரவரி, 2010

குழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும்


ஒரு பிறந்த குழந்தை சராசரியாக 20 அங்குலம் நீளமும் 7.5 பவுண்டு எடையுடனும் இருக்கும். ஆனால் பெண் குழந்தை ஆண் குழந்தையைவிடச் சற்றுச் சிறியதாக இருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தையைக் குறை மாதத்தில் பிறந்தது என்கிறோம். ஒரு குழந்தை பிறக்கும்போது 5.5 பவுண்டுக்குக் குறைவாக இருந்தால் அந்தக் குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்கிறார்கள். அதன் கர்ப்பத்தில் இருந்த காலத்தைப் பற்றிப் பொருட்படுத்துவதில்லை. இவ்வாறு குறை மாதத்தில் பிறந்த குழந்தை சில ஆண்டுகளில் சாதாரண குழந்தைகளுக்குள்ள எடையைப் பெற்றுவிடுகின்றது.

பிறந்த உடனே குழந்தை சில செயல்களைச் செய்கிறது. அழுதல், கை கால்களை மடக்கி நீட்டுதல் ஆகியனவாகும். இச்செயல் அதன் வெப்பநிலை தொடர்ந்து இருக்கவும், மூச்சு சீராக விடவும் துணை புரிகிறது. ஒரு பிறந்த குழந்தையின் எடை அதன் 6-வது மாதத்தில் இரண்டு மடங்காகவும், ஒரு வருடத்தில் ஏறத்தாழ மூன்று மடங்காகவும் இருத்தல் நலம். ஒவ்வொரு வருடத்திற்கும் ஆறு பவுண்டு எடை கூடலாம். உயரமும் முதல் வருடத்தில் 20 அங்குல முதல் 30 அங்குலமாகவும் வளர்வது நலம். சராசரியாக உயரம் ஒரு வருடத்திற்குச் சுமார் 2 அங்குலம் வீதம் வளர்கிறது. சாதாரணமாக 10வது மாதத்திலோ 18வது மாதத்திலோ நடக்கும். 6 அல்லது 7 மாதக் குழந்தையை இரண்டு அக்குள்களிலும் பிடித்து கொண்டு நடக்க வைக்க முயற்சிக்கலாம். முதலாண்டுத் தொடக்கத்தில் வழக்கமாக ஊர்ந்து செல்லல், தவழுதல், உட்கார்ந்தவாறே நகர்ந்து செல்லல், ஒரு பக்கமாகக் கையை ஊன்றி ஊர்ந்து செல்வதைக் காணலாம்.

குழந்தைகள் நடக்க முற்படுமுன்பே பேச்சை அறிய முற்படுகிறது. எட்டாவது மாதத்தில் பரிசோதனை ஒலியும், உறுமலும் எழுப்பும், ஒரு வருடத்தில் பொதுவாகச் சில வார்த்தைகளை பேசுவது, இரண்டாவது வருடத்தில் பேச்சின் அபிவிருத்தி பொதுவாகத் தாமதப்படுகிறது. காரணம் என்னவெனில் நடக்கவும் எதையாவது பிடித்து ஏறவும், உண்ணவும், தானே தன் உடுப்பை உடுத்திக் கொள்ளவும், முதலியவகைகளில் கவனம் செலுத்துவதாலேயே மேற்கொண்டவாறு ஏற்பட ஏதுவாகிறது. பெரும்பாலான குழந்தைகள் அதிக வார்த்தைகளைப் பேசுவதோடு, சிறிய வாக்கியங்களையும் பேசுகின்றன. 2 வயதுக்கும் 5 வயதுக்கும் இடையில் உள்ள ஒரு குழந்தை, குடும்பச் சூழ்நிலை, பெற்றோர்களின் அறிவிற்கேற்பத் தன் பேச்சை, அறிவை, பேச்சுப் பரிமாற்றங்கள் மூலம் வெளியிடும் வாய்ப்பைக் பெறுகிறது. அப்படியில்லாத சூழ்நிலையில் வளரும் குழந்தை தனக்குள்ளேயே புரியாமலே தானே பேசிக் கொள்ளும். அதனுடைய பேச்சு நீள ாது. பெரியவர்கள் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதுண்டு. அக்கதைகளைக் கேட்ட குழந்தை, கதைகளைக் கேட்காத குழந்தையை விடப் பேச்சின் நீளம் அதிகமாக வாய்ப்புண்டு.

மூன்று அல்லது நான்காவது வயதில் அதிகமான வார்த்தைகளை அறிந்திருக்கும். ஐந்தாவது வயதில் வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கும், தகுதியான கதைகளைச் சொல்லவும், மகிழ்ச்சி, கோப உணர்வுகளை வெளியிடவும், பொருளின் நிறம், அமைப்பு ஆகியவைகளை விவரிக்கவும் செய்கிறது. ஒரு குழந்தைக்குப் பேசும் ஆற்றல் தாமதமானால் அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. பேரறிஞரும் விஞ்ஞானியுமான ஐன்ஸ்டீன் அவர்கள் தனக்கு மூன்று வயதானபோது கூட அவர் பேசவில்லை. அதற்குப் பிறகுதான் பேசினார் என்று வரலாறு கூறுகின்றது. அவ்வாறு சிறுவயதில் பேசாதிருந்தவர்தான் உலகமே வியக்கத்தக்க அறிவும் ஆற்றலும் பெற்றவராகத் திகழ்ந்தார் என்பது யாவரும் அறிந்ததே. இரண்டு வயதாகியும் ஒரு குழந்தை பேசவில்லை; ஏதோ கோளாறு உள்ளது என்று பெற்றோர் கருதினால் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்க அணுகலாம். பெற்றோர்களோ, மற்றவர்களோ தாங்கள் பெற்ற அறிவைக் கொண்டு குழந்தைகளிடம் அதே அறிவைச் சீக்கிரம் அடைய எதிர்பார்க்கக்கூடாது. உடலாலும் மனத்தாலும் ஆகிய குணங்களைக் குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பெறுகின்றனர். இதைப் பெற்றோரின் பரம்பரைப் பிறவிக் குணம் என்கிறோம். பெற்றோர்களின் குரோமோசோம்கள் குழந்தைகளின் முடி, கண்களின் நிறங்கள் ஆகியவை மூலம் அறியலாம்.

தான் பெற்ற இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி குணங்களையும், எண்ணங்களையும் கொண்டிருக்காது. அதனால் அவர்களின் தன்மைக்கேற்ப நடத்த வேண்டும். தன் எண்ணத்தை அழுகையின் மூலம் குழந்தை தன் தாய்க்குத் தெரிவிக்கின்றது. சில நேரங்களில் காரணமில்லாமலும் அழும், அதனால் அதைப் புறக்கணிக்கலாகாது. குழந்தை பசிக்காக அழுகிறதா, வலியால் அழுகிறது. அல்லது தன்படுக்கை சரியில்லை, இடுப்பில் கட்டப்பட்டுள்ள துணி சிறுநீர் கழித்து ஈரமானதால் அழுகின்றதா, என்று அழுகையின் தன்மையையும் குரலின் வித்தியாசத்தையும் ஒரு தாய் அறிந்து கொள்ளலாம்.

குழந்தைக்குத் தாய்ப்பாலே சிறந்த உணவாகும். ஊட்டச்சத்து நிறைந்தது. குழந்தைக்குத் தாய்ப்பால் சரியான வெப்ப நிலையில் கொடுக்கப்படுகிறது. புட்டிப்பால் சரியான வெப்பநிலையில் கொடுக்கப்படுவதில்லை. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் தாய்பபால் குடிக்கும் குழந்தைகளைவிட வயிற்றுக் கோளாறுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. காரணம் தாய்ப்பாலில் கிருமிகள் இருக்காது. புட்டிப்பால் குடிக்கும் குழந்தை ஒரு வேலைக்கு எவ்வளவு பால் குடிக்கிறது என்பதைப் புட்டியிலுள்ள அளவைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். ஆனால் தாய்ப் பால் குடிக்கும் குழந்தை எவ்வளவு பால் குடிக்கிறது என்பதை அறிய முடியாது. பால் புட்டிகளையும், சூப்பான்களையும் கொதிக்கும் நீரில் ஒவ்வொரு முறையும் பால்கொடுக்கும் போது கழுவிப் பயன்படுத்தவேண்டும். குழந்தைகளை அதிகமாக உண்ணுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அவர்கள் பருக்க வழிவகுத்துவிடும். அதனால் எடை கூடி மார்பு மற்றும் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட ஏதுவாகும். அதிகமாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால் நாளடைவில் குறைக்க முற்படுவதில் சிரமம் ஏற்படும்.

குழந்தைகளுக்குப் பால் பற்கள் சுமார் 5 அல்லது 6 மாதத்தில் கீழ்த்தாடையில் முளைக்கும். 7 அல்லது 8வது மாதத்தில் மேல் பற்களும், 9 அல்லது 10வது மாதத்தில் மேலும் 4 பற்களும் இப்படியே பால்பற்கள் தோன்றுகின்றன. பால் பற்கள் முளைக்கும் காலத்தில் சளி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் வருவதில்லை. பற்கள் வலியின்றிச் சுலபமாக வளர்கின்றன. குழந்தையின் பிறப்பு முதல் எழுதுவதானால் பக்கம் பக்கமாக எழுதலாம். இயற்கையின் எதிர்ப்புச் சக்தி குறைவதால், நோய் தாக்குவது சுலபம். ஆகையால் குழந்தைப் பருவத்தில் எதிர்ப்புச் சக்தி பெற, செயற்கை முறையில் தயாரான தடுப்பு மருந்துகளை ஊசி மற்றும் சொட்டுகள் மூலம் அளிக்கிறார்கள். காலரா, டிப்தீரியா, இன்புளுவன்சா, மீசில்ஸ், மம்ஸ், பிளேக், டெடானஸ், டீயூபர் குளோசிஸ், டைபாய்டு, ஊப்பிங்காப் ஆகிய நோய்களுக்குத் தடுப்பு மருந்துகள் அளிக்கிறார்கள். இந்நோய்கள் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுநோய்க் கிருமிகளால் பரவுகின்றன என்கின்றனர். (ஆங்கில தடுப்பு மருந்துகளின் பக்கவிளைவு, பின் விளைவு காரணமாக அவற்றுக்கு மாற்றாக ஹோமியோபதி தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது - ஆசிரியர்) இவைகள் அல்லாமல் மற்ற நோய்கள் தண்ணீர், உணவு, எலி, பால், மூட்டைப்பூச்சி, கால்நடைகள், கொசு, கரப்பான் பூச்சிகள் மற்றும் நோயுள்ளவருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளவருக்கும் ஏற்படும்.

பெரியவர்களுக்கு நோய் வந்தாலும் நோயின் தன்மையைப் பற்றி தெளிவாகவும், விளக்கமாகவும் தெரிவிப்பார். குழந்தைகளால் அவ்வாறு இயலாது என்பது யாவரும் அறிந்ததே. குழந்தைகளுக்குச் சிகிச்சை செய்வதுதான் கடினமான ஒன்றாகும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் பெரும்பாலும் தொண்டை நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். வெளியில் சுத்தமற்று விற்கும் ஐஸ், மிட்டாய், பழங்கள் ஆகியவைகளை வாங்கி உண்ணுவதால் இருமல், நெஞ்சுச்சளி, மூச்சுத் திணறல், தொண்டைக்கம்மல், வலி, கரகரப்பு ஆகியவைகள் ஏற்படுகின்றன. சத்துள்ள கொழுப்பு உணவுகளை உண்ணும் போது வாந்தி வயிற்றுப் போக்கு, வயிற்று வலி ஏற்பட ஏதுவாகிறது. வாந்தியுடன் தலைவலி, மயக்கம், கழுத்துப்பிடிப்பு ஏற்படலாம். அணியும் துணி, தூசி, சுற்றுப்புறச் சூழ்நிலை, சிலவகை உணவு ஒவ்வாமை ஆகிய காரணங்களால் மூச்சுக் குழல் அழற்சி யால் ஆஸ்த்மா போன்ற நோய்கள் வரலாம். குழந்தைகள் திடீரெனக் கத்தும். எதனால் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே குறிப்பிட்ட காரணங்களின்றி வயிற்று வலியால், காதில் சீழ்ப் பிடித்ததால் ஏற்பட்ட வலியாலோ, சிறுநீர்க் கழிக்கமுடியாததாலோ, மலச்சிக் கலாலோ என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. வயிற்று வலி என்றால் அதிகமாகச் சாப்பிட்டு விட்டதாலோ சாப்பிடும்போது அதிக உணர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தாலோ ஏற்படலாம். காதுவலி என்றால் வலியால் பாதிக்கப்பட்ட காதுப் பக்கம் நம்மைத் தொட விடாது. சிறுநீர்க் கழிக்கும் முன்போ, கழிக்கும் பொழுதோ, கழித்த பின்போ, வலியாலோ, எரிச்சலாலோ கத்தலாம். இதைத் தவிர, தேள்கடி, வண்டுகள், பூச்சிகள் கடித்ததினாலும் அழலாம். பயத்தாலும் வீறிட்டுக் கத்தலாம்.

பத்து வயதும் அதற்குக் கீழ் உள்ளவர்களை மருத்துவத்துறையில் குழந்தைகள் பட்டியலில் சேர்க்கின்றனர். குழந்தைகளின் வளர்ச்சிக்குத் திட்டமிட்ட நல்உணவு தேவை. பற்கள், எலும்புகள் திடகாத்திரமாக இருக்க அதிக அளவில் சுண்ணாம்புச் சத்து தேவை. பால், வெண்ணெய், மீன், முட்டை, பழங்கள், காய்கறிகள் மூலமாக ஊட்டச்சத்து உணவு வகைகளைக் கொடுத்து வந்தால் நோயின்றி, நலமாக இருக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்க்குறிகளும் அதற்கான மருந்துகளும் என்ன என்று காண்போம் :



1. பிறந்தவுடன் குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால் - அகோனைட்

2. குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால் - ஹெலிபோரஸ்

3. இருமல் வருமுன் கத்துதல் - ஆர்னிகா, அபிஸ்

4. நடக்கத் தாமதம் - நேட்முர், கல்கார்ப், காஸ்டிகம்

5. நடக்கவும் பேசவும் தாமதம் மற்றும் மூளைக் கோளாறினால் - அகாரிகஸ்

6. நடக்கும்போது தடுமாற்றமும், கீழேயும் விழுந்தால் - காஸ்டிகம்

7. வளர்ச்சி குன்றியதால் பேசவும், நடக்கவும் தாமதம் - பாரிடாகார்ப்

8. தன்னைக் கொஞ்சவேண்டும் என்ற எண்ணமும், பரபரப்பாகவும் இருக்க விரும்புதல் - பல்சடில்லா

9. பல் முளைக்கும் காலத்தில் குழந்தையின் மூளையில் எரிச்சல் உண்டாக்கும் உணர்வால் தூக்கமின்மை - சிமிசிபியூகா

10. விளையாட விருப்பமில்லாமை - பாரிடாகார்ப்

11. தாய்ப்பால் மறந்ததனால் தூக்கமின்மை - பெல்லடோனா

12. திட்டினாலோ, தண்டித்தாலோ ஏற்படும் கோளாறுகள், பல பொருள்களுக்காக அழுகிறது, கொடுத்தால் பெற மறுக்கின்றது - ஸ்டாபிஸôக்ரியா

13. மூளையின்அதிக உணர்வினால் இரவில் எழுந்து சிரித்து விளையாடும். பிறகு நோய் வரும் - சைபிரிடியம்

14. தூங்கும்போது முன் கைகளில் உள்ள தசைகள் சுண்டும். சொல்படி கேட்காது. அமைதி அற்று இருக்கும். பார்க்கும் பொருளை வேண்டும் என்று கேட்கும். கொடுத்தால் எறியும். வலியைப் பொறுக்காது. கோபத்தால் குணமிழந்து அநாகரிகமாய் நடந்து கொள்ளும் - சாமோமில்லா

15. தொடர் வாந்தி - மெர்க்.டல்சிஸ், ஜரிஸ்வெர்

16. தன்னைத் தூக்கவோ, உயரத் தூக்கவோ விரும்பாது - பிரையோனியா

17. பல்முளைக்கும் காலத்தில் மலச்சிக்கல் - மெக்மூர்

18. பிடிவாதமான மலச்சிக்கல் - பாரஃபின்

19. மிகக் குளிர்ந்த காலத்தில் மலச்சிக்கல் - விராட்.ஆல்

20. சாதாரண மலச்சிக்கல் - அலுமினா, கோலினஸ், சோரினம்

21. செயற்கைப் பால் குடித்ததால் மலச்சிக்கல் - அலுமினா, நகஸ்வாமிகா

22. குழந்தை உரத்த கூச்சலுடன், உடல் முழுவதும் நடுக்கத்துடனும், தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளுதல் - இக்னேசியா

23. குழந்தை தேம்பித் தேம்பிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு கதறி அழும். அழுகை நின்ற பின்னும் தேம்பிப் பெருமூச்சு விடும் - இக்னேசியா

24. மன ஏக்கமும் பிடிவாதக் குணமுள்ளவை - அகாரிகஸ்

25. தொண்டை வேக்காடு - அகோனைட்

26. சிறுவர் விரைகளில் நீர்க்கோர்வை, வீக்கம் - ஹிபார்.சல்ப், அப்ரோடேனம்

27. தொப்புளிலிருந்து இரத்தம் கசிதல் - அப்ரோடேனம், கல்.பாஸ்

28. குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்புகள் - ஆம்ராகிரிசா

29. மூக்கிலிருந்து இரத்தம் கொட்டுதல் - அப்ரோடனம், பெர்ரம், சிலிகா

30. பால் ஒத்துக் கொள்ளாது - எதுசாசைனாபியம்

31. திடீர் என்று கடுமையான வாந்தி - எதுசாசைனாபியம்

32. அன்பாகப் பேசினால் கத்தி அழும் - சிலிகா

33. ஆசனவாய்ப் பிதுக்கம் - போடோபில்லம்.

34. சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டால் உறுப்பைப் பிடித்துக் கொண்டு கத்துதல் - அகோனைட்

35. சிறுவர்களின் காலரா - எதுசாசைனாபியம், விராட்ஆல்பம், சரசபரில்லா, காம்பர்

36. பிறந்த குழந்தை மூச்சு விடமுடியாமல் திக்குமுக்கு ஆடல்- ஆண்டிடார்ட், காம்பர், லாராசரஸ்

37. ஆஸ்துமா - சாமோமில், இபிகோ, நேட்சல்ப், பல்சடில்லா, சாம்புகஸ், வைபூர்ணம்

38. காசநோய் இருமல் - பாரிடாமுர்

39. சீக்கிரம் வளருதல் - பாஸ்பரஸ், ஆசிட்பாஸ்

40. ஆசனவாயில் அரிப்புடன் பிதுக்கம் - பெர்ரம்மெட்

4.1. குழந்தை குறட்டை விடல் - சின்கோனா

42. தொப்புள் ஹெரினியா - நக்ஸ்வாமிகா

43. கொதித்த பால் குடித்தால் வயிற்றுப் போக்கும் சீக்கிரம் களைப்பும் ஏற்படல் - செபியா

44. காமாலை - லுப்புலஸ், மைரிகா

45. நாடாப்பூச்சியை அகற்ற - கௌசோ, பிலிக்ஸ்மாஸ்

46. தன்னைத் தொடவோ, எடுக்கவோ பிடிக்காது - சீனா

47. ஆசனவாய் அரிப்பு - டுகுரியம்

48. வயிற்றில் கீரிப்பூச்சிகள் - நேட்.பாஸ், சபாடில், நாப்தா

49. குழந்தைக்குப் பேசினாலோ, அசைந்தாலோ இருமல் வந்திடுமோ என்ற பயம் - சீனா

50. கக்குவான் இருமல் - நாப்தலின்,டிரோசீரா, கொராலியம், காக்கஸ், டெர்பின், ஹைட்ரேட்

51. குழந்தையைத் தூக்கும்போது தாதியைப் பிடித்துக் கொள்ளும் - போரக்ஸ், ஜெல்சிமியம்

52. காது சம்பந்த நோய் - பல்ஸ், சாமோமில், ஜீங்கம்

53. வாய்ப்புண் - போரக்ஸ், மெர்க், சோல், சல்-ஆசிட்

54. மூக்கடைப்பு - நகஸ்வாமிகா, லைகோபோடியம்

55. வயிறு சம்பந்த நோய் - பாரிடா கார்ப், கல், கார்ப், காஸ்டி, சல்பர், அமிக்டலிஸ்பர்

56. வயிற்றின் கீழ் ஹெர்னியா - ஆரம்மெட்

57. மூலம், வலியால் தொடமுடியாமை - மூரியாடிக் ஆசிட்

58. வயிற்றுப்போக்கு - எதூசா, கல்-கார்ப், கல்-சல்ப், சாமோமில்லா, இகொ, பிமக் முரி, மெர்க், போடோபில், ரீயம், சிலிகா, ஸ்டிரமோன், சல்ப், சோரினம்

59. சொன்னால் கேட்காது முக்கியமாக இரவில் தொல்லை வரும் - லேக்கானினம்

60. “புராங்கோ நிமோனியா” - டியூபர்குலின், ஸ்குல்லா

61. பள்ளி செல்லும் குழந்தைக்குத் தலைவலி - நேட்.மூர், கல்காரியா பாஸ்

62. நாட்பட்ட சளி மூக்கில் ஒழுகுதல் - மெடோரினம்

63. எவரும் தன் பக்கத்தில் வருவதைப் பொறுக்காது - குப்.மெட்

64. இருமலின் போது கைமுட்டியைக் கொண்டு முகத்தைத் தேய்த்துக் கொள்ளும் - ஸ்குல்லா, பல்ஸ், காஸ்டிகம்

65. தனியாகப் படுக்கச் செல்லாமல் கத்தும் - காஸ்டிகம்

66. இருமல் வரும்போது தூக்கிக் கொள்ளாவிட்டால் கடுமையான இருமலால் பாதிக்கும் - நிக்கோலம்

67. பயங்கரப்பசி - நிக்கோலம்

68. பலமற்ற குழந்தை - சைனா

69. என்னவென்று தெரியாமலேயே பல பொருளை விரும்பிக் கேட்கும்; கொடுத்தால் மறுக்கும் - சீனா

70. தூக்கமின்மை - ஜிங்கம், வலேரினம்

71. பால் கொடுத்து, தயிர் போல் வாந்தி எடுத்தபின் மீண்டும் குடிக்க விரும்பாமை - ஆன்டி.குருட்

72. பகலில் குடிக்க விரும்பும், இரவில் மறுக்கும்-அபிஸ்மெல்

73. மூளையில் நீர்க்கோர்வையால் மயக்கமுடன் கை, கால்களைத் தானாக அசைத்தல் - அபோசினம்

74. திறந்த வாயுடன், வாய்வழியே மூச்சுவிட்டுக் கொண்டு வருதல் - பாரிடாமூர்

75. முக்கியமாகக் கால்களில் மட்டும் பலமற்று இளைப்பு ஆரம்பம் - அப்ரோடேனம்

76. தூக்கிக் கொள்ளச் செல்லும் - அசிடிக் ஆசிட்

77. தலையைத் தொட அனுமதிக்காது - அசிட்டிக் ஆசிட்

78. கோடை காலத்தில் நீர்ப்போன்ற வயிற்றுப்போக்கு - அகோனைட்

79. முட்டாள்தனம் - எதுசாசைனதபியம்

80. பல் முளைக்கும் காலத்தில் கோளாறு - எதுசாசைனதபியம்

81. வலி ஏற்படும் போது கண்கள் கீழ்நோக்கிச் சொருகுதலுடன் வாயில் நுரை வருதல் - எதுசாசைனதபியம்

82. சத்தான உணவு இல்லாததால் தலையை நிமிர்த்த முடியாது - எதுசாசைனதபியம்

83. தயிர்போல் வாந்தி எடுத்தல் - எதுசாசைனதபியம்

84. பரிட்சை பயம் - அனகார்டியம்

85. பரிட்சையில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் - பிக்ரிக் ஆசிட்

86. பரிட்சை என்றாலே மனமுடைதல் எதுசா - சைனாபியம்

87. படிப்பிலோ, படிக்க முயற்சி செய்யும் போதோ எண்ணத்தை நிலை நிறுத்தாமை - அபிஸ், ரேம்னஸ் கலிபோர்னிகா

88. சட்டி போல் வயிறுள்ள குழந்தைகளுக்கு வயிற்றுவலி - ஸ்டாபிஸôகரியா

89. பகலில் நன்றாக இருந்துவிட்டு இரவில் தொல்லை தரும்- ஜலப்பா

90. காசநோய் உடல்வாகுள்ள குழந்தைக்கு எடை கூட - ஆர்ச ஐயோடைட்

91. சிபிலிஸ் உடல்வாகுள்ள குழந்தைக்கு எடை கூட - காலி ஐயோட், ஆரம்மெட்

92. வயிற்றுப்போக்கு பச்சை நிறம் - மெர்க்.சோல், மெர்க்.கரோ

93. வயிற்றுப்போக்கு, பசலைக் கீரை நிறம் - இபிகாக்

94. வயிற்றுப்போக்கு, பச்சை நிறம், ஆதங்கம், பரபரப்பு, தாகம் - அகோனைட்

95. வயிற்றுப்போக்கு, பச்சை நிறம் அதிக இனிப்பு உண்டாதல் - அர்ஜ்.நைட்

96. வயிற்றுப்போக்கு, பச்சைநிறம் வயிற்றைத் தொடவிடாது- பெல்லடோனா

97. தன் நிழலைக் கண்டுபயப்படுதல் - லைக்கோபோடியம்

98. தூங்கும்போது காதுகளைக் குடையும் - சிலிகா

99. வயிற்றுப்போக்கால் உடலில் நீர் வறட்சி - சைனா

100. இரத்தசோகை - பெர்ரம்மெட், பல்ஸ்

101. பாலை ஜீரணிக்க முடியாமை - மெக்மூர்

102. இருமும் போது தொண்டையைப் பிடித்துக்கொள்ளும் - ஐயோடைம்

103. உடலில் புளிப்பு வாடை இருத்தல் - மெக்.கார்ப்

104. தூங்கி எழுந்தவுடன் மூடியகையைக் கொண்டு கண், மூக்கு தேய்த்தல் - சானிகுலா

105. குழந்தைகளின் எடை கூட, மனம் உடல் நலம் பெற - ஆல்பால்பா.

106. தூக்கத்தில் நடத்தல் - காலி புரோம்

107. வளர்ச்சி குன்றல் - லைகோ.போடியம்

108. பயத்துடன் குதித்துக் கொண்டு, அலறிக்கத்தும் - சல்பர்

109. உணர்வைத் தூண்டும் தின்பண்டங்களைத் தாய் சாப்பிட்டதால் குழந்தைக்கு வயிற்றுவலி-நக்ஸ்வாமிகா

110. நோயுள்ள குழந்தை கவலை, பயத்தால் பகலிலும்இரவிலும் கத்தும் அல்லது பகலில் நன்றாகவும்,விளையாடிக்கொண்டும் இரவில் அழுது கொண்டு இருத்தல் - சோரினம்

111. பகலில் நன்கு தூங்கி, இரவில் விழித்துக் கொண்டு சொன்னால் கேட்காமல், திட்டவும் உதைக்கவும் செய்யவும், தாயைப் பிடித்துக் கொண்டு தொல்லை தரும். -லைகோபோடியம்

112. தோளின் குறுக்கே தூக்கி வைத்துக் கொள்ள விரும்பும் - ஸடேனம்

113. இரவில் போர்வையை உதைத்துத் தள்ளும் - சானிகுலா

114. நகங்களைக் கடித்தல் - ஆர்சி.ஆல், அகோனைட்

115. மூக்கில் விரல் விட்டு இரத்தம் வரும் வரை குடைதல் - ஆரம்டிரிப்

116. தலைவலியின் போது கையைத் தலையின் பின் பக்கமாக வைத்துக் கொண்டு வலியால் கத்தும் - ஆரம்டிரிப்

117. அதிப் பிடிவாதம், அடஙகாமை - ஆரம்டிரிப்

118. பாலு உணர்வு - ஆலோ

119. பிறர் முன் சிறுநீர் கழிக்க வெட்கப்படுதல் - ஆம்பிரா

120. இனிப்பு மேல் ஆவல் - அர்ஜெண்ட்.நைட்

121. தன்னையே வருத்திக் கொண்டு, முடியை இழுத்துக் கொள்ளும் - ஆர்ச்.ஆல், பெல்லடோனா

122. தூக்கத்தில் தூக்கிப் போடுதல் - பெல்லடோனா

123. காலராவில் உடல் சூடாயிருத்தல் - பிஸ்மத்

124. சூடான தலை - போரக்ஸ்

125. மிருகம் மற்றும் புதியவர்ளைப் பார்த்தால் பயம் - புபோ

126. தூங்கும் போது மூச்சு அடைக்கும் - கல்.பாஸ், போரக்ஸ்

127. இரவு பகல் அழுதல் - ஓபியம்

128. பல்முளைக்கும் காலம், தண்டனைக்குப் பின், பயத்திற்குப் பின் தினம் குறிப்பிட்ட நேரத்தில் வரும் இசிவு - இக்னேசியா

129. பலவீனமான குழந்தை அதிகமாக விளையாடினாலோ, சிரித்தாலோ இசிவு வரும் - கபியா

130. முடியைப் பிடித்து இழுக்கும், தலையில் அடித்துக் கொள்ளும் - டுபர்குளினம்

131. மூக்கு அழுக்கு நிறைந்து இருக்கும் - மெர்க்குரியஸ்

132. தூங்க ஆரம்பித்தும் படுக்கையில் சிறுநீர் கழித்தல் - கிரியோசோட், செபியா

133. 16 மாதமாகியும் பிறர் உதவியின்றி நிற்கவோ, நடக்கவோ முடிவதில்லை - சானிகுலா

134. தனக்கு எட்டக்கூடிய எந்தப் பொருளையும் வாயில் வைத்தல் - சல்பர்

135. இருட்டைக் கண்டால் பயம் - ஸ்டிரமோனியம்

136. சிறுநீரோ, மலமோ கழிப்பதில்லை - ஸ்டாபி சாகிரியா, லேடம்

137. பிறந்தவுடன் கத்துதல், பிறந்ததில் இருந்து கத்திக் கொண்டே இருத்தல் - சிபிலினம்

138. கைகள் சும்மா இருக்காமல் துறுதுறு என்று ஏதாவது செய்தல் - டாரன்டுலா

139. தலையைச் சுவரில் தானாகவே முட்டிக் கொள்ளுதல் - சிபிலினம், மில்லிபோலியம்

140. கோபப்படும் போது மூச்சு அடைத்தல் - ஆர்னிகா

141. குழந்தையின் தலையை மூடினால் பிடிக்காது - பெர்ரம்பாஸ்

குழந்தை பிறந்தவுடன் செய்யவேண்டிய பரிசோதனைகள்.


குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல தொந்தரவுகளை சரிசெய்து விடலாம்.

குறை தைராய்டு (Congenital Hypothyroidism) : பிறவி தைராய்டு குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மூளை வளர்ச்சியின்மை, மனவளர்ச்சி குன்றிய தன்மை போன்றவற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும். குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அட்ரீனல் கோளாறு (Congenital Adrenal Hyperplasia) : பிறவியிலேயே அட்ரீனல் குறைபாடுள்ள குழந்தையாக இருந்தால் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி குறைந்திருக்கும். இக்குறைபாடு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளித்தால் மட்டுமே குழந்தையின் உடலைக் காக்க முடியும்.

என்சைம் குறைபாடு (Galactosemia) : என்சைம் குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு கண்புரை, மனவளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்படலாம். குழந்தைக்கு உரிய ஊட்டச்சத்து உணவு கொடுத்து காப்பாற்ற முடியும்.

இந்தப் பரிசோதனைகளை குழந்தை பிறந்த மூன்று தினங்களுக்குள் அதன் குதிகாலில் இருந்து சிறு துளி ரத்தத்தை எடுத்து செய்ய வேண்டும்.

குழந்தைகளை புரிந்துகொள்ளுங்கள்.


குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் “எதுசரி” “எதுதவறு” என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். “சேட்டை” என்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும் போது குழந்தை சும்மானாச்சுக்கும் மண்ணைத் தொட்டால் கூட “சனியனே, “சனியனே” “பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்கு” என்று திட்டுவோம். ஆக “சேட்டை” என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம்.

அடுத்து, குழந்தை தன்னையோ, மற்றவரையோ, மற்றவைகளையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்த பிறகு அடிக்காமல் முன்பே “விதிகளை“ சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாய்க் கண்டிக்கவேண்டும். நீங்க குழந்தையா இருந்தபோது சேட்டை செய்தீர்களா? இல்லையா?

அடிக்காமல் வளர்ப்பது எப்படி?

அடிப்பதைத் தாண்டி வேறு எதையுமே யோசிக்க மாட்டீர்களா? அடித்து சரிபடுத்த அவர்கள் என்ன மத்தளமா? கண்டிப்பாக என்பது “இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது” சில குழந்தைகள் “நான் உன் கூட பேசமாட்டேன்” என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக்கொள்ளும். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. பெற்றோர்களுக்கும் அவரவர் குழந்தைகளைப்பற்றி நன்கு தெரியும். பொறுமையின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

குழந்தை உரிமை மீறல் என்கிறீர்களே? குழந்தைக்கு என்ன உரிமை? குழந்தை உரிமை என்றெல்லாம் இருக்கா?

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா? இப்படித்தான் நிறைய நபர்களுக்கு சந்தேகம் உள்ளது. உதாரணமாக ஒரு 8 மாத குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறுஊட்டும் போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத்தாய் எப்படியாது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப் போதுதான் அந்தத்தாய்க்கு மனநிறைவு. மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு வயிறுநிறைய சோறு ஊட்டி விட்டதாகத் திருப்தி. ஆனால் அந்தக் குழந் தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிறு நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில் ‘பார் பிடிவாதத்தை. அப்படியே அது அப்பனை கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய்.

இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் அளவுக்குமீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது. வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப் போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக்குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார். ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, அடிபட்டதால் அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது. இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.

மற்றோர் வன்முறை அதிகாரத்தால் நிகழக்கூடியது. ஒரு குடும்பத்தில் குடித்துவிட்டு வந்த தந்தை தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை கடைக்கு அனுப்பித் தனக்கு சாப்பாடு வாங்கிவரச் சொல்கிறார். அந்த குழந்தை, தன் தகப்பன் கேட்ட உணவு கடையில் தீர்ந்துவிட்டால், கடையில் இருப்பதை வாங்கி வருகிறான், இதற்காக மகனை கண்மண் தெரியாமல் விளாசித் தள்ளுகிறார் தந்தை. இது அதிகாரத்தினால் நடக்கும் வன்முறை. தகப்பன் குடித்தது முதல் தவறு. தன் குழந்தைகளுக்கு தான் குடித்ததாக காட்டியது இரண்டாவது தவறு. தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் தூக்கத்தை அர்த்தமில்லாமல் கெடுத்தது மூன்றாவது தவறு. அவனை அடித்தது மிக மோசமான தவறு. ஆகிய இத்தனை தவறுகளும் விளைவதற்கு காரணம் அதிகாரம். என்னால் என்னமும் செய்யமுடியும் என்கிற போக்கு, நான்தான் இந்த வீட்டில் முடிவெடுக்கும் நபர் என்ன எண்ணத்தில் எழும் சிந்தனை. இம்மாதிரி குழந்தைகளுக்கு அனுதினமும், நிறைய நேரங்களில், எல்லா நபர்களாலும் குழந்தைகளுக்கான வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதெல்லாம் வன்முறையா? நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் குழந்தையை ஒழுங்காகவும் நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று? இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் பார்த்துப் பார்த்து செய்ய முடியுமா?

கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

“குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்பு களை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.” என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம். நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம். செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால் அவனும் ‘அடிக்கிற கை அணைக்கும்’ என்று அடிப்பான்.

நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள். ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்து தான் செய்யவேண்டும். நிலத்தில் விதையைத் தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லா? குழந்தைகள் விதையை விட முக்கியமானவர்கள். நல்ல பலன் தரும் விதைகளாக, விருட்சங்களாக வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்கவேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து, பேசி வளர்க்கவேண்டும்.

சரி குழந்தைகளை அடிக்க கூடாது, திட்டி கண்டித்து வளர்க்கலாமா? இல்லை அதுவும் கூடாதா?

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு சிறுமியை அவள் தாய், ‘நீ எதுக்குத்தான் லாயக்கு. நீ பொறந்ததே வேஸ்ட்’ என்று திட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே எந்தக் காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகி விடக்கூடும். அப்புறம் அந்தப்பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வதே பெரும்பாடாகிவிடும். இம்மாதிரியான மனநிலையை, பாதிப்புக்குள்ளாகும் சொற்களை, குழந்தைகளிடம் பேசுவது மிகப்பெரிய குற்றம். நாம் இந்தத் தவறைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய பெற்றோர்கள், குழந்தைகளோடு பழகுபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இத்தகைய சொற்களால் மன அளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் நம் சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.

இப்படியெல்லாம் இருக்கா? சரி நாம் கண்டிக்காம விட்டுட்டா ரொம்ப அதிகமாகப் பேசி அனைவலின் மத்தியிலும் கெட்ட பேரெடுக்குமே?

திரும்பத்திரும்பச் சொல்கிறேன், கண்டிப்பது என்பது வேறு. அந்தக் குழந்தையை மனரீதியாக தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது ஒரு செயலைச்செய்யும் போது நல்லது கெட்டது என்ன என்பதை புரியவைப்பது. அப்படியே அந்தக்குழந்தை தவறு செய்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பின் அனுபவத்தைப் புரிய வைப்பது. உதாரணமாகத் தீயைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கிய பின்னும் அந்தக் குழந்தை அதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு சுட்டுக்கொண்டால் கூட அதன் விளைவுகளை, அதன் பாதிப்புகளை, காயம் ஆறியபிறகே உணர்த்தவேண்டும்.

யாரேனும் ஒருவர் பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கும் போதுதான் ‘எனக்கு அப்பவே தெரியும். இப்படியெல்லாம் ஆகுமென்போம். நம் அறிவாற்றலை வெளிப்படுத்தாமல் பக்குவமாக, மனிதமனம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில், புரிய வைக்கவேண்டும். விளக்க வேண்டும். ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்பது பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பதுதான். நாம் என்ன செய்கிறோம் என்றால் இருட்டுக்குள் போனால் பிரச்சனையாகிவிடும். ஆகவே இருட்டுக்குள்ளே போகவே கூடாது என்பதைத்தான் நாம் கற்றுக்கொடுக்கிறோம். மாறாக இருட்டுக்குள்ளே போய் பிரச்சனை வந்தால் எவ்விதம் பாதுகாத்துக்கொள்வது, எப்படி தப்பிப்பது என்பதை சொல்வதில்லை. இதற்குப்பெயர் தான் ‘மதிப்பீட்டுக்கல்வி’ (வேல்யூ எஜீகேசன்) என்று சொல்வார்கள்.

உங்களது அடுத்த கேள்வி அதிகமாப் பேசி கெட்ட பெயரை குழந்தைகள் எடுப்பார்கள் என்பதுதானே. நாம் பேசும் பேச்சு எல்லோருக்கும் பிடிக்கிறதா? வாய் தவறிப் பேசும் சில பேச்சுக்கள் நமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் ‘இது தவறு’ ‘இது சரி’ என்று எங்கே நாம் திருத்திக்கொண்டோம்? ஒவ்வொரு முறையும் நாம் பேசுவதால் ஏற்படும் பிரச்சனைக்குப் பின்புதானே.

அந்த அனுபவத்தைக் கொண்டு குழந்தைகளைப் பேசவிட்டுப் புரியவைக்கவேண்டும். கருத்து சுதந்திரமே நாம் நம் குழந்தைகளுக்குக் கொடுத்ததில்லை. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்குக் கொடுத்ததே இல்லை. குழந்தைகள் பேசும் அளவிற்கு வந்ததும் பெரியவர்களாகிய நாம் அமைதி காத்து, பேச்சைக் குறைத்து குழந்தைகளைப் பேச அனுமதிக்கவேண்டும். பேசும்போதே அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்ய வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை. ரூசோவின் வார்த்தைகள் எனக்கு நினைவிற்கு வருகிறது. ‘உன் பேச்சு சுதந்திரத்திற்காக என் உயிரையும் தரத்தயாராயிருக்கிறேன்’ என்கிறார், அவர் எதிரிகளைப் பார்த்து, எதிரிகளின் பேச்சு சுதந்திரத்திற்காக தன் உயிரையும் தரத்தயாராயிருந்தபோது நாம் நம் குழந்தைகளின் பேச்சு சுதந்திரத்தைப் போற்றவேண்டும்தானே.

பெண் குழந்தைகளைப் பேச அனுமதிப்பதில்லையா? அவர்கள்தானே நிறையப் பேசுகிறார்கள்? அப்படியே பேசினாலும் கண்டிப்பது தாய்க்குலங்கள் தான்.

ம்ம்ம். தாய்குலங்களுக்கு, எங்கே தங்கள் குழந்தைகள் வளர்ந்து உரிய வயதில் திருமணமாகிப் போகிற குடும்பங்களில் இப்படிப் பேசி, அந்த வீட்டில் ‘வளர்த்திருக்கிறதைப் பார்’ என்று தங்களைத் திட்டுவார்களோ என்ற ஐயத்தினால் இப்போதிருந்தே அடக்கி ஒடுக்கி வளர்க்கிறார்கள். தங்கள் வளர்ப்பைப் பற்றின விமர்சனத்திற்கு பயந்து இப்போதே பேசவிடாமல் தடுப்பது எந்தவகையைச் சார்ந்தது?

கருத்து சுதந்திரம் இல்லாததால்தான் தன் மீது நடக்கும் வன்முறைகளைக் கூட, மௌனமாக ஏற்றுக்கொள்ளும் போக்கினை குழந்தைகள் பெற்று எவ்வித எதிர்ப்பையும் காட்ட மறுக்கிறார்கள். இதுவே நாளடைவில் சமூகத்தில் நடைபெறும் பலவிதமான கேடுகளை எதிர்க்கத் திராணியற்று வன்முறைகளை வளர்க்கும் போக்கிற்கு மௌனமாக ஒத்துழைக்கிறார்கள். அதனால், வீடுகளில் நடக்கும் வன்முறைகளுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்விட்டது.

என்ன? வன்முறையா? குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வன்முறையாளர்களா? பெற்ற குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க நாங்கள் என்ன பாடுபடுகிறோம்? வன்முறை செலுத்துகிறோம் என்கிறீர்கள்?

சரி. நான் அன்றாடம் நடக்கும் சில செய்திகளை சொல்லிக்கொண்டே வருகிறேன். இது வன்முறையா? இல்லையா என்று பாருங்கள்.

பெண் குழந்தைகளை உடலளவிலும் மன அளவிலும் பெரும்பாதிப்பை உண்டாக்கும் குழந்தைத் திருமணங்கள் நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் கரூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஊட்டி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடந்து வருவதாக சமூக நலத்துறை பட்டியலிட்டிருக்கிறது. புள்ளவிபரங்கள் வெளியிட்டிருந்தால் எங்கே பிரச்சனையாகுமோ என்று வெளியிடவில்லை. இது ஒரு வன்முறையில்லையா?

குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 மாதக் குழந்தை விற்கப்பட்டுள்ளது. இதற்காக பெறப்பட்டுள்ள தொகை அரிசி, மஞ்சள் கிழங்கு. (தினமணி 10-5-05) இது போன்ற பல செய்திகளைச் செய்திதாள்களில் காணமுடியும் இது வன்முறையில்லையா?

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் நடுத்தரக் குடும்பங்களில் 1 கோடி கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தை என்பதால் இவை நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த உலகத்தில் ஆண்குழந்தைகள் தான் இருக்கவேண்டும் என்ற கருத்தாக்கத்தால் எழுந்து இந்த வன்முறை. இவை வன்முறையில்லாமல் வேறென்ன?

ஒரு வருடத்திற்குத் திருட்டுத்தொழில் செய்ய 50 ஆயிரத்திற்கு பெற்ற மகனை விற்ற செய்தி (தினத்தந்தி 27-10-05) எதை வெளிப்படுத்துகிறது.? குழந்தை தனது சொத்து என்ற அடிப்படையில் நடந்த இந்த நிகழ்வு வன்முறையில்லையா?.

குழந்தைகளை ஆசையோடும் அன்போடும் அரவணைத்து வளர்ப்பவர்கள் பெற்றோர்கள் என்பதுதான் நம் பொதுவான கருத்து. ஆனால் பெற்ற பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு நடக்கும் நிகழ்வுகள் ஏராளம். இவைகளை வன்முறை என்று சொல்லலமா? கூடாதா?

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 6 முதல் 7 லட்சம் சிறுமிகள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இவை வன்முறைதானா? இல்லையா?

ஆக, குழந்தைகளுக்கு அங்கிங்கெணாதபடி எல்ல இடங்களிலும் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதன் அடிப்படையான காணத்தைத் தோன்டும் போதுதான் சங்கிலித்தொடர் போன்று சமூகப் பிரச்சனையாகவும், அரசியல் பிரச்சனையாகவும் வடிவமெடுக்கின்றன. பாரபட்சமான, ஏற்றத்தாழ்வான சாதிய அடுக்குமுறைகளும் இதற்குக் காரணமாகின்றன என்று புலப்படுகிறது. இவற்றைக் களைய வேண்டும் என்றால் பல கட்டங்களில் நம் போராட்டம் தொடரவேண்டும்.

ஒட்டு மொத்தமாக குடும்பத்தில் உள்ள வன்முறைகளை சொல்கிறீர்கள்? ஆனால் எங்கள் வீட்டில் அவ்வாறு நடப்பதில்லை...

எவ்வளவு ஆழமாக நம்புகிறீர்கள். பெரியவர்கள் வீடுகளில் சண்டை போடுவது கூட குழந்தைகளின் மனநிலையை மிக ஆழமாக பாதிக்கிறது. நான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு குழந்தையிடம் படம் வரையச்சொன்னேன். தன் அப்பாவும் அம்மாவும் சண்டையிடுவதால் தனக்குப் படிப்பும் வரவில்லை, இருக்கவும் பிடிக்கவில்லை என்று குழந்தை சொல்வதான கார்ட்டூன் அது. அந்தக் குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்த போது எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளாள் என்று தெரிந்தது.

“யார் யாரோடு சண்டை போட்டாலும் கடைசியில் பாதிக்கப்படுவது நான் தான். எனக்குத்தான் அடி கிடைக்கும். திட்டு கிடைக்கும். அப்போதெல்லாம் நான் அழுவேன். அழுதால் அதற்கும் அடி கிடைக்கும். அதனால் கஷ்டப்பட்டு அடங்குவேன். தொண்டையெல்லாம் அமுக்கி வலிப்பது போல இருக்கும். நெஞ்சுவலிக்கும். நிற்க வைத்து ஜெயிலுக்குள் இருப்பவர்கள் கிட்ட கேள்வி கேட்பது போல் கேட்பார்கள். நிறைய தடவை நினைப்பேன். சுனாமி வந்தப்ப இவங்க செத்து போயிருக்க கூடாதா?... என்று. அப்புறம் உடனே சாமிகிட்ட மன்னிப்பும் கேட்பேன். நான் அவங்க கிட்ட அடியும் உதையும் வாங்கறப்ப எல்லாம் எங்கயாவது ஓடிப்போலாம் போல இருக்கும்.

அப்படி போனா பொம்பளைப் பிள்ளங்கள யாரோ பிடிச்சுக்கிட்டு போயிருவாங்கன்னு எங்க பக்கத்து வீட்டு பெரியம்மா சொல்லும். நான் எங்கப்பாரு அடிக்கும் போதெல்லாம் கெஞ்சுவேன். என் சத்தம் எதையும் காதில வாங்க மாட்டாங்க. எனக்கு எங்கம்மாவும் அப்பாவும் அன்பு செய்ய மாட்டாங்களான்னு இருக்கும். பக்கத்துல உட்கார்ந்து பேசமாட்டாங் களான்னு இருக்கும். அவங்க மடியில் படுத்து கத்தணும் போல இருக்கும். கோபமா இருக்கும்போது அவங்களைப் பாத்தாலே எனக்கு பயம். இதனால சரியாவே படிக்க முடியலை. பள்ளிக் கூடத்திலே டீச்சரும் படிக்காட்டி அடிப்பாங்க. எங்கம்மாவும், எங்கப்பாவும் கையில அடிச்சாங்கன்னா எங்க டீச்சர் குச்சியில அடிப்பாங்க. எல்லா பிள்ளைகளும் சிரிக்கும். சிரிக்கிறப்ப செத்து போகலாம்னு இருக்கும். ஏன் பொறந்தோம்னு இருக்கு. நான் யாருக்கும் பிரயோசனமில்லை. ஒண்ணு சுனாமில நா செத்திருக்கணும்” என்று கேவிக்கேவி அழுதாள் அந்தக் குழந்தை.

மனசே தாங்கவில்லை. இப்படிப்பட்ட சின்னச்சின்ன விசயங்கள் கூட அந்தக் குழந்தைகளை எப்படிப் பாதிக்கிறது. ஒரு வார்த்தையைக் கூட தாங்க முடியாத அளவு அவ்வளவு மெல்லியதா இவர்கள் உள்ளம்? பூ என்று சொல்வார்களே, அதைப்போன்றதா? எங்களின் சொல்லும் செயலும் உங்களை அவ்வளவாகவா பாதிக்கிறது? எங்களின் நடவடிக்கை உங்களை உட்சுருக்கி சுக்குநூறாக நொறுக்கி விடுகிறதா? என் போன்றோர் திருந்தாத வரையில் ஒட்டுமொத்த பெற்றோர்கள் சார்பாக உங்களிடம் மன்னிப்பு மட்டும் தான் கேட்கமுடிகிறது என்னால். ஆனால் இதை வாசிக்கும் ஒவ்வொரு நபரும் கண்டிப்பாகத் திருந்துவார்கள். எனக்கு நம்பிக்கையிருக்கிறது.

மனதுக்கு துயரமாகத்தான் உள்ளது. ஆனால், இவ்வளவு பெரியவர்களாகிய நமக்கே சுதந்திரம் கிடைக்கலை. யார் குழந்தைகளின் சுதந்திரத்தை யோசிக்கப்போகிறார்கள்?

இங்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்து என்னென்ன சுதந்திரங்கள் உள்ளன? (பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி கற்க, இந்தியாவில் எங்கும் சுதந்திரமாக போய்வர... இப்படி கொஞ்சம் தெரியும். ஆனா எங்க.... (!?) இதெல்லாம் இருந்தும் நம்மால் செய்ய முடிகிறதா என்ன?)

உங்கள் ஆதங்கமா இது? சரி, சுதந்திரம் என்பதை இப்படியாகப் புரிந்துகொள்ள வேண்டும். குடைபிடித்துப் போவது சுதந்திரம் என்றால் அந்தக் குடையின் கம்பி அடுத்தவரது கண்ணைக் குத்தாதவரை என்பதாக அர்த்தம் கொள்ளவேண்டும். எல்லா சதந்திரமும் அனுபவிக்க முடியாதவரை நம்மைத் தடுப்பது எது? என்பதை நாம் யோசிக்கவேண்டும். நமது கல்வி அவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்.

தந்தை பெரியார் சொன்ன சில வரிகள் எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘சேர சோழ பாண்டியர் நாயக்கர் ஆகிய மன்னர்களும் அவர்களது படையெடுப்புகள், நாட்டு எல்லைகள், ஆண்டவிதம், செய்தசீர்திருத்தம் ஆகியவை சரித்திரம் படித்த மாணவர்களுக்கு தெரிவதில்லை. மாறாக, தசரதனுக்கும், கிருஷ்ணனுக்கும் பலிச்சக்கரவர்த்திக்கும் எத்தனை மனைவிகள், எத்தனை குழந்தைகள் என்று தெரியும்.

பூகோளம் படித்தவனுக்கு உலகப்பரப்பு அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இருக்காது. ஆனால் இல்லாததும், இருக்க முடியாததுமான மேல் உலகம், கீழ்உலகம், சொர்க்கம், நரகம் அதன் வர்ணனை பலன்கள். ஆகியவை முழுவதுமாக தெரியும்.

வானவியலைப் பற்றிப் படித்த மாணவனுக்கு சூரிய சந்திரனின் உண்மைத்தன்மை, அதன் தாக்கம், இயக்கம், சீதோஷ்ண நிலைக்கு காரணம் ஆகியவை சரிவரத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரன், வளரவும் தேயவும் சாபம் தான் காரணம் என்றும் இராகு, கேது விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகிறது என்றும், அதற்கான பரிகாரம் இன்னின்னது என்றும் தெரியும்.

விஞ்ஞானத்தைப் படித்தவர்கள் அந்தப்படிப்பின் தன்மையும் பயனும் உண்மைகளும் தெரிவதற்கு பதிலாக பாம்புப் பால்குடிக்கும் என்று புத்துக்கு பால்வார்ப்பது, போன்ற மூட நம்பிக்கைகளை வளர்ப்பதில் பெரும்பாலும் முன்னணியில் நிற்கும் அளவிற்கு தான் கல்வி முறைகள் உள்ளன’ என்றார். தந்தை பெரியார் சொன்னவற்றில் ஒரு சிறு அளவு கூட மாற்றம் இல்லை.

கல்வி என்பது தீயவற்றை எதிர்க்கும் சிந்தனையை வளர்த்தெடுக்கவும், மனிதம் வளர்க்கும், மனம் வளர்க்கும், உடல் வளர்க்கும், சுதந்திரமான, அடிமைத்தனம் அற்ற, மனித ஆளுமைகளை வளர்க்கிற கல்வியாக இருக்கவேண்டும்.

குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்ளாதவரை நமக்கு நாமே பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பது நிச்சயம். ஒவ்வொரு குழந்தைக் கல்வியாளர்களிடமும் கேட்டுப் பாருங்கள். தன்னிடம் படிக்கும் மாணவர்கள் மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதாகத்தான் அவர்களின் எண்ணம் இருக்கும். ஆனால் வெளிப்படுத்தும் விதம்தான் மாறுபடுகிறது. மாணவர்களைத் ‘திருத்துவது’ என்பது அடித்து திருத்துவது, தண்டித்து திருத்துவது, பிற மாணவர்கள் மத்தியில் மனம் புண்படுகிறவரை திட்டித் திருத்துவது அல்ல.

அதன் விளைவு எதுவாக இருக்கும்? ஒரு மாணவன் எந்த நிலைக்கு வரவேண்டும் என்ற ஈடுபாட்டில் ஆசிரியர்கள் யோசித்தார்களோ அந்த நிலை மாறி அம்மாணவன் தன் ஆசிரியரை ஒரு எதிரியாகப் பாவிப்பான். வகுப்பில் சரியாகக் கவனிக்காத மாணவனை ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்கள் மத்தியிலும் சத்தம் போட்டு திட்டி ‘வெளியே போ” என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அம்மாணவன் மிகச் சாதாரணமாக வகுப்பை விட்டு வெளியேறினால் ஆசிரியரின் நோக்கம் வீணாகிவிடும். மாறாக, அம்மாணவனைத் தனியாக அழைத்து நேரத்தின் முக்கியத்துவத்தையும், அவன் வீட்டில் எந்த அளவு கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைக்கிறார்கள் என்பதையும், வகுப்பு நேரத்தில் கவனிப்பு எந்த அளவிற்கு பிரயோசனமானது என்பதையும் உணர்த்தினால் நிச்சயமாக சிறிதளவு பயன் இருக்கும். அம்மாணவனின் உள்ளத்தில் ஆசிரியரைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் எண்ணமும் உயரும். ஏனென்றால் நாம் சொல்லக்கூடிய கருத்துக்களைப் பிறர் ஏற்கவேண்டும் என்றால் கேட்பவர் மத்தியில் கருத்து சொல்பவர்களைப் பற்றிய மதிப்பீடு சிறந்த முறையில் இருக்கவேண்டும்.

கொஞ்சநாளாக நானும் குழந்தைகளை அடிப்பதை நிறுத்தினேன். எவ்வளவு கோபம் வந்தாலும் பரவாயில்லை என்று என்னைக் கட்டுப்படுத்தினேன். ஆனால் என் மகன் சொன்னபடியே கேட்பதில்லை. இவனை என்ன செய்யலாம்?

அதை உங்கள் குழந்தையிடமே கேட்டுப்பாருங்கள். பலன் கிடைக்கும். நான் உன்னை அடிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். நீ இப்படி செய்தால் கண்டிப்பாக அடிப்பேன். உனக்கு அடி கொடுக்கட்டுமா? என்று கேட்டுப்பாருங்கள்... குழந்தைகள் எப்போதும் நிறைய விசயங்களை உள் வாங்குகிறார்கள். உங்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை இந்நேரம் உணர்ந்திருப்பார்கள். உட்கார்ந்து பேசினால் போதும். நாம் நம் குழந்தைப்பருவத்தைக் கொஞ்சம் திரும்பி பார்ப்பது அவசியம். நாம் நம் சிறுவயதில் என்னவெல்லாம் செய்திருப்போம். எப்போது பார்த்தாலும் தெருவில் ஆடிக்கொண்டிருக்கவில்லையா? வெயிலும், மழையும், பனியும் நம்மை பாதிக்குமா? எப்போது பார்த்தாலும் ஒரே துள்ளல்தான். இந்த நிலையை நாம் நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோமா? எப்போது பார்த்தாலும் படிப்பத்தான். விளையாடுவது கூட அடைக்கப்பட்ட கூண்டுக்குள் தான். போதாதற்கு டி.வி. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்முடைய குழந்தைப் பருவம் எவ்வளவு நன்றாக இருந்தது? இப்போதுள்ள குழந்தைகளைப் பாருங்கள். எவ்வளவு இன்பத்தை இழக்கிறார்கள்? இவர்கள் பெரியவர்களானதும் இதைவிட இன்னும் இறுகலாகி இயந்திரங்களைப் போல ஒரு வாழ்க்கையை மேற்கொள்வார்கள். விளையாட்டு என்ற பதமே நம் அகராதியிலிருந்து இல்லாமல் போய்விடும்.

குழந்தைகளுக்கு நம்முடைய அணுகுமுறை புரியுமா?

குழந்தைகள் எவ்வளவு அறிவுத்திறன் பெற்றவர்கள் என்பதை இந்த ஒரு கவிதை வெளிப்படுத்தும்.

“எட்டாத

உயரத்தில்

எல்லாவற்றையும்

வைத்தாயிற்று

கவின் கையில்

இப்போது

ஒட்டடைக்கொம்பு”

- கவின்குறுநூறு

இது குழந்தைகளின் அறிவுத்திறனை படம்பிடித்துக்காட்டுகிறது. பெரியவர்களுக்குத்தான் எதையும் எளிதில் சொல்லிப் புரியவைக்க முடியாது. எல்லாவற்றிற்கும் ஒரு உதாரணம் வேண்டும். அதை விளக்கிச்சொல்ல வேண்டும். காரணம் சொல்லவேண்டும். குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது. விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.

- நன்றி : சிடா அறக்கட்டளையின் ‘குழந்தை கல்வியாளர்களோடு.....’

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

இறைவன் படைப்பின் அற்புதம்.

இறைவனுடைய படைப்பில் எல்லாமே அதிஅற்புதமும் விந்தைகளும் நிறைந்தது, அதில் விந்து ஒரு விந்தையானது, இதைத்தான் இறைவன் கூறுகிறான் உன் பிறப்பை பற்றி நீ சிந்தித்தால் என்னைப் பற்றி அறிந்துக் கொள்வாய் என்று கூறுகிறான். இதில் ஆழமான அர்த்தம் உள்ளது.

மனிதன் செழுத்தும் ஒரு சொட்டு விந்தில் பல்லாயிரக் கணக்கான உயிரணுக்கள் பெண்ணின் யோனியில் விடப்படுகிறது அங்கிருந்து ஃபிலொப்pயன் டியுப் வழியாக கரு முட்டையை சென்றடைகிறது. இந்த ஃபிலொபியன் டியுபிற்கும் விந்தணு கரு முட்டையை சென்றடைதற்கும் உள்ள தூரம் ஒரு மனிதன் 5 மைல் நீளம் ஆற்றை நீந்திக் கடப்பதற்கு சமமானது. ஒரு கூட்டமாக செல்லும் விந்தணுக்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டது கருமுட்டையை துளைத்து சென்று அடைந்ததும் மற்ற விந்தணுக்கள் வாழ்த்துச் சொல்லி திரும்பி விடுகிறது.

எதிர் நீச்சலும், மற்றவரை முந்தி செல்ல வேண்டிய நிர்பந்தமும் மனித உயிரணுக்கு அப்பொழுதே தொடங்கி விடுகிறது. உள்ளே செல்லும் நுண் உயிரியான அது தான் 6 அடி உயரமுள்ள மனிதனாக பரிணமிக்கிறது. என்னே இறைவனின் வல்லமை.


விந்தணு ஃபிலோபியன் டியுப் வழியாக கரு முட்டை நோக்கி செல்லும் போது.

ஒரே சமயத்தில் இரண்டு விந்தணுக்கள் கரு முட்டையை துளைத்து உள்ளேரும் போது.

Genetical material உயிரணுவின் தலையில் Store செய்யப்பட்டிருக்கிறது.


8 நாட்கள் ஆன Embryo, Mucous membrane என்ற tissue ஆல் போர்த்தப் படுகிறது.
22 நாட்கள் ஆன embryo யில் முதலில் உருவாவது மனித மூளை
24 நாட்களில் இதயம் உண்டாகி துடிக்கத் தொடங்குகிறது.
9 வாரங்களில் V வடிவ இரத்தக் குழாய் கள் உண்டாகி எலும்புகளும் உண்டாகின்றன.
10 வாரங்களில் 3 செ.மி நீளம் வளர்கிறது.
20 வாரங்களில் குழந்தை 20 செ.மி நீளம் வளர்கிறது.
36 வாரங்களில் குழந்தை முழு உருவம் பெறுகிறது
இரட்டை குழந்தை இருக்கும் விதம்

மனநலம் குன்றிய குழந்தைகளை கருவில் கண்டறியும் சோதனை


மனநலம் குன்றிய குழந்தைகளை கருவிலேயே கண்டறியும் சோதனையை இலவசமாக செய்ய தமிழ்நாடு டவுன்ஸ் சிண்ட்ரோம் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் மரு‌த்து‌வ‌ர் ரேகா ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆண்களின் 23 குரோமோசோம்களும், பெண்ணின் 23 குரோமோசோம்களும் இணைந்து கரு உண்டாகுகிறது. இந்த 23 குரோமோசோம் ஜோடிகளில் 21-வது குரோமோசோம் ஜோடியில் ஏற்படும் குறைபாடு காரணமாக டவுன்ஸ் சிண்ட்ரோம் ஏற்படுகிறது. இ‌ந்தியாவில் பிறக்கும் 600 குழந்தைகளில் ஒரு குழந்தை டவுன்ஸ் சிண்ட்ரோம் எனப்படும் மனநலம் குன்றிய குழந்தையாக உள்ளது.

இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைபாடு, உடல் ஊனம், அதீத வளர்ச்சி போன்ற பல்வேறு வகையான குறைபாடுகளுடன் பிறக்கின்றன. இந்த குறைபாடுள்ள குழந்தைகளை குணப்படுத்த முடியாது. ஆனால் கர்ப்ப காலத்திலேயே பிறக்க போகும் குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் உள்ளதா என்பதை அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் கண்டறிய முடியும்.

இது கு‌றி‌த்து மெடிஸ்கேன் நிறுவனத்தின் இயக்குனர் மரு‌‌த்துவர் சுரேஷ் மரு‌த்துவ‌ர் சுஜாதா ஜெகதீசன் ஆகியோர் சென்னையில் நே‌ற்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், தங்களுக்கு பிறக்க போகும் குழந்தைகள் பற்றி பெற்றோர் எண்ணற்ற கனவுகளில் இருப்பார்கள். சாதாரண ஸ்கேன்கள் மூலம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை ஓரளவே தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, குரோமோசோம் மாற்றத்தால் உருவாகும் டவுன்ஸ் சிண்ட்ரோமை கண்டறிவதற்கு அதிநவீன கருவிகள் தேவைப்படுகின்றன.

முன்பெல்லாம், கரு உருவான 5 மாதங்களுக்கு பிறகுதான் குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறிய முடியும். ஆனால் தற்போது கரு உருவான 11 முதல் 13 வாரங்களுக்குள்ளாகவே குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறியலாம். கரு உண்டான பெண்ணின் ரத்தமாதிரியை எடுத்தும், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலமும் இந்த சோதனை நடத்தப்படும்.

இந்த 2 சோதனைகளில் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு, குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளதா? என்பதை அறியலாம். இதில் திருப்தி ஏற்படாவிட்டால், அடுத்ததாக கருவின் நஞ்சுக்குழாயில் இருந்து திசுக்களை எடுத்து குரோமோசோம் பரிசோதனைக்கு உட்படுத்தி கண்டுபிடிக்க முடியும். இந்த சோதனைக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும் எ‌ன்று கூ‌றினா‌ர்க‌ள்.

அத‌ன்‌‌பி‌ன்‌ன‌ர் பே‌சிய தமிழ்நாடு டவுன்ஸ் சிண்ட்ரோம் அமைப்பின் தலைவர் மரு‌த்துவர் ரேகா ராமச்சந்திரன், டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை பராமரிப்பதற்கு தனிப்பட்ட கவனம் தேவை. அந்த வகையான குழந்தையை பெற்றெடுத்த பிறகு கஷ்டப்படுவதை விட, கருவிலேயே தெரிந்து கொள்வது நல்லது. இந்த வகை குழந்தைகள் மிகவும் அன்பாக இருப்பார்கள். அவர்களுக்குள் திறமைகள் புதைந்து இருக்கிறது. பயிற்சி அளிப்பதன் மூலம் அவற்றை வெளியே கொண்டு வர முடியும்.

சென்னை அபிராமபுரம் 3-வது தெருவில் உள்ள தமிழ்நாடு டவுன்ஸ் சிண்ட்ரோம் அமைப்பை அணுகுபவர்களுக்கு இந்த சோதனையை இலவசமாக செய்து வருகிறோம். எங்கள் அமைப்பு மூலம் இதுவரை 30 பேர் சோதனை செய்துள்ளனர்.

தமிழக அரசும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளது. பொதுவாக, கருவுற்றிருக்கும் அனைத்து தாய்மார்களும் இந்த சோதனைகளை செய்து கொள்வது அவசியமாகும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம் எ‌ன்று ரேகா ராமச்சந்திரன் கூறினார்.

இந்த நவீன சோதனை மூலம் கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் இருப்பது உறுதி செய்யப்பட்ட 2 கர்ப்பிணிப் பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்த குழ‌ந்தைக‌ள்


பிற‌ந்த குழ‌ந்தைக‌ளி‌ன் மூளையை‌த் தா‌க்‌கி அவ‌ர்களது இய‌ல்பான ‌நிலையை ‌பா‌தி‌க்க‌ச் செ‌ய்யு‌ம் நோ‌ய் தா‌ன் ஆ‌ட்டிச‌ம் என‌ப்படு‌கிறது. இ‌த‌ன் மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்‌சினை எ‌ன்னவெ‌ன்றா‌ல் இ‌ந்நோ‌ய் கு‌றி‌த்து மரு‌த்துவ உலகா‌ல் கூட இதுவரை ச‌ரிவர பு‌ரி‌ந்து கொ‌ள்ள முடிய‌வி‌ல்லை எ‌ன்பதுதா‌ன்.

ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்த குழ‌ந்தைக‌ள் ‌பிற‌ந்த 6 மாத‌த்‌தி‌ல் செ‌ய்ய வே‌ண்டிய ‌சி‌ன்ன ‌சி‌ன்ன செய‌ல்களை‌க் கூட செ‌ய்யாம‌ல் முட‌ங்‌கி இரு‌க்கு‌ம். அதாவது தா‌யி‌ன் முக‌த்தை அடையாள‌ம் காணுத‌ல், ‌சி‌ரி‌த்த‌ல், மழலை‌யி‌ன் ஒ‌லி எழாம‌ல் இரு‌ப்பது, அரு‌கி‌ல் ‌நி‌ன்று கூ‌ப்‌பி‌ட்டாலு‌ம் எ‌ந்த சலனமு‌ம் இ‌ல்லாம‌ல் இரு‌ப்பது, பொ‌ம்மைகளோடு கூட ‌விளையாட மறு‌த்த‌ல், கைக‌ளி‌ல் ஒரு ‌பிடி‌ப்‌பு‌த் த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது போ‌ன்றவை ஆ‌ட்‌டிச‌ம் நோ‌யி‌ன் அ‌றிகு‌றிகளாகு‌ம்.

ஆ‌ட்‌டிச‌ம் எ‌ன்பதை ‌விள‌க்கமாக‌க் கூற வே‌ண்டுமானா‌ல் அது ஒரு நோய் அல்ல; மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு. மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு த‌ன்னை‌ச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு. த‌ன்னை‌ச் சு‌ற்‌றி நட‌க்கு‌ம் எதை‌ப் ப‌ற்‌றியு‌ம் கவலை‌ப் படாம‌ல், த‌ங்களு‌க்கெ‌ன்று ஒரு த‌னி உலக‌த்தை உருவா‌க்‌கி‌க் கொ‌ண்டு அ‌தி‌ல் மூ‌ழ்‌கி ‌கிட‌ப்பா‌ர்க‌ள். ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ல் டி‌ஸ்ஆ‌ர்ட‌ர் எ‌ன்று ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் இ‌ந்த நோ‌ய் அழை‌க்க‌ப்படு‌‌‌கிறது.

இ‌ந்த நோ‌ய் பா‌தி‌த்த குழ‌ந்தைக‌ள் ம‌ற்றவ‌ர்களுட‌ன் உறவை‌ப் பேண முடியாது, ம‌ற்ற குழ‌ந்தைகளுட‌ன் இணை‌ந்து ‌விளையாடுத‌ல் போ‌ன்ற சாதாரண ‌விஷய‌ங்க‌ளி‌ல் கூட ஈடுபட முடியாது. பொதுவாக ஆ‌ட்‌டிச‌ம் பா‌தி‌த்த குழ‌ந்தைகளு‌க்கு பே‌ச்சு வருவ‌தி‌ல் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌ம். ‌சிலரு‌க்கு ந‌ல்ல முறை‌யி‌ல் பே‌ச்சு வருவது‌ம் உ‌ண்டு. ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் இ‌ப்படி‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று எ‌ந்த ஒரு வரையறையு‌ம் இரு‌ப்ப‌தி‌‌ல்லை. ஒ‌வ்வொருவரு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் செய‌ல்படுவது‌ண்டு.

ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌ப்‌பி‌ற்கு எ‌ந்த காரணமு‌ம் இதுவரை க‌ண்டு‌பிடி‌க்க‌ப்பட‌வி‌ல்லை. பெ‌ண்களை ‌விட ஆ‌ண்களையே அ‌திகமாக ஆ‌ட்டிச‌ம் நோ‌ய் தா‌க்கு‌கிறது. இ‌ந்‌தியா‌வி‌ல் ம‌ட்டு‌ம் சுமா‌ர் 20 ல‌ட்ச‌ம் இ‌ந்‌திய‌ர்க‌ள் ஆ‌ட்டிச‌த்‌தினா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ஆனாலு‌ம், அ‌ட்டிச‌ம் ப‌ற்‌றிய எ‌ந்த ‌விவரமு‌ம் பொதும‌க்களை இ‌ன்றுவரை அ‌திகள‌வி‌ல் செ‌ன்றடைய‌வி‌ல்லை எ‌ன்பது கவலை‌க்கு‌ரிய ‌விஷயமாகு‌ம்.

ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்களை எ‌ப்படி பராம‌ரி‌ப்பது போ‌ன்ற அடி‌ப்படை ‌விஷய‌ங்க‌ள் கூட, மெ‌த்த படி‌த்தவ‌ர்களு‌க்கு‌ம் அ‌றியாத ஒ‌ன்றாகவே உ‌ள்ளது. மேலு‌ம், உட‌லிய‌ல் ப‌ரிசோதனைக‌ள் மூல‌ம் ஆ‌ட்டி‌ச‌ம் நோ‌ய் இரு‌ப்பதை க‌ண்ட‌றிய முடியாது. ‌சில அடி‌ப்படை அ‌றிகு‌றிகளை‌க் கொ‌ண்டுதா‌ன் ஆ‌ட்‌டிச‌ம் நோ‌ய் இரு‌ப்பதை க‌ண்ட‌றிய முடியு‌ம். அ‌ப்படி ஆ‌ட்டிச‌ம் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்தா‌ல், அத‌ற்கான உ‌ரிய ‌சி‌கி‌ச்சை முறைகளை மே‌ற்கொ‌ண்டு, ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு மறுவா‌ழ்வு அ‌ளி‌‌ப்ப‌தி‌ல் சமூக‌ம் அ‌க்கறை செலு‌த்த வே‌ண்டு‌ம்.

இதுவரை ஆ‌ட்டிச‌ம் ஏ‌ற்படுவது எதனா‌ல் எ‌ன்பதை க‌ண்ட‌றிய முடிய‌வி‌ல்லை. ‌சில கரு‌த்து‌க்க‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல், தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துகளின் குறைபாடு, 'செக்ரடின்' என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் 'ஆட்டிசம்' ஒரு நோய் அல்ல என்பது மட்டும் உறுதி. எனவே அதற்கு மருந்து என்பது கிடையாது. ஆனால் ஆரம்பக்கட்டத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்துகொள்ள உதவலாம்.

இதற்கான வழிமுறைகள் குறைபாடுகளின் தன்மையைப் பொறுத்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பொறுத்தும் வேறுபடும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். எனவே, ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு முறையான ப‌யி‌ற்‌சி அ‌ளி‌த்து அவ‌ர்களையு‌ம் இய‌ல்பான வா‌ழ்‌க்கை வாழ வ‌ழி செ‌ய்யலா‌ம்.

ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு பு‌திய மரு‌ந்து ஒ‌ன்றை ச‌மீப‌த்‌தி‌ல் ‌அ‌றி‌விய‌ல் ‌வி‌ஞ்ஞா‌‌னிக‌ள் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

குழந்தை மருத்துவம் : பெற்றோர் கவனத்துக்கு !


நமது நாட்டில் மருத்துவ சிகிச்சைகள் குறித்த குறைந்த பட்ச அறிவும், மருந்துகளின் பயன்பாடுகள் குறித்த போதுமான விழிப்புணர்வும் பெரும்பாலானோருக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மேலை நாடுகளில் மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் பெரும்பாலான மருந்துகள் வினியோகிக்கப்படுவதில்லை. அந்த விதிமுறையை அங்குள்ள அனைத்து மருந்தகங்களும் தவறாமல் கடைபிடிக்கின்றன.
ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி இல்லை. மருத்துவ சோதனை செய்யாமல் மருந்து கடைகளில் சென்று நோயைச் சொல்லி மருந்து வாங்கிச் செல்வது நாம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரண நிகழ்ச்சி.
இத்தகைய பழக்கம் பல வேளைகளில் பெரும் சிக்கல்களில் நம்மைக் கொண்டு போய்விட்டுவிடுகிறது.அதிலும்குறிப்பாககுழந்தைகளுக்குசரியானபரிசோதனையின்றி மருந்துகள் வழங்குவது அவர்களுடைய உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விடுகிறது.

மருத்துவரிடம் குழந்தைகளைக் கொண்டு செல்லும் போது நிதானமாகவும், கவனமாகவும் நமது சந்தேகங்களைக் கேட்க வேண்டும்.

சுமார் ஐம்பது விழுக்காடு பெற்றோர் ஏதேனும் ஒரு சந்தேகத்துடன் தான் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வருகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.

மருத்துவரிடம் மீண்டும் ஒரு முறை நமது சந்தேகத்தைக் கேட்பது நமது தரத்தைக் குறைக்குமென்றோ, மருத்துவரை சிரமப்படுத்துவதும் என்றோ நினைப்பது குழந்தைகளின் உடல் நிலையைப் பாதிக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிப்பது அனைவருக்கும் பயன் தரும்.

1. முதலில் மருந்தின் “கடைசி நாள்“ என்ன என்பதைக் கவனியுங்கள். கடைசி நாள் எட்டப்பட்டிருந்தாலோ, தாண்டியிருந்தாலோ அந்த மருந்தை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். அது எத்தனை விலையுயர்ந்ததாய் இருந்தாலும்.

2. மருந்து எத்தனை முறை அளிக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள். நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை எனில் ஒரு நாள் ஆறு முறை அளிக்கவேண்டும் என நினைவில் கொள்ளுங்கள். நோய் குறையவில்லை என்பதற்காக அதிக தடவைகள் கொடுப்பது தவறு.

3. எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அந்த அளவு மட்டும் கொடுங்கள். அதிக அளவில் மருந்து கொடுப்பது நோயை எந்த விதத்திலும் விரைவில் குணப்படுத்தாது. மாறாக குழந்தைகளுக்கு இன்னல்களை உருவாக்கி விடக் கூடும். எனவே சரியான அளவு மருந்து மட்டுமே அளிக்க வேண்டும்.

சில மருந்துகள் 100 எம்.ஜி, 200 எம்.ஜி என பல வகைகள் உண்டு. மருந்தின் பெயரோடு சேர்த்து அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மருத்துவர் காய்ச்சலுக்காக ஐந்து நாள் ஆண்டிபயாடிக் கொடுத்தால், குழந்தையின் நோய் குறைந்து விட்டது என்பதற்காக மூன்றாவது நாளே நிறுத்தக் கூடாது. இது குழந்தைக்கு மீண்டும் அந்த நோய் வரும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.

5. பழைய மருந்து வீட்டில் இருந்தால் அதைப் பயன்படுத்தும் முன் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள். சில மருந்துகள் பயன்படுத்தத் துவங்கிய சிறிது நாட்களில் வீரியம் இழந்து போகும். எனவே மருத்துவரிடம் அதுபற்றி உரையாடுதல் அவசியம்.

6. மருந்து உட்கொண்டதும் குழந்தையின் உடல்நிலையில் ஏதேனும் பிழை இருப்பது போல உணர்ந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும். குழந்தைக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதையும் மருத்துவரிடம் முன்னமே தெரியப்படுத்த வேண்டும்.
முக்கியமாக பெரியவர்களுக்காய் வாங்கிய மருந்துகளை அதே போன்ற நோய் என்பதற்காய் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது.

7. மருத்துவர் நோய்க்கான மருந்துகளை எழுதித் தரும் போது எந்தெந்த மருந்து எதற்குரியது என்பதை கவனமாகக் கேளுங்கள். பின் மருந்து கடைகளில் அதை வாங்கும் போது அங்கும் அதே கேள்வியைக் கேளுங்கள். மருத்துவரின் பதிலும், மருந்து கொடுப்பவரின் பதிலும் ஒத்திருக்க வேண்டும்.

மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் மருந்தை பழச்சாறு, ஐஸ்கிரீம் போன்றவற்றுடன் கலந்து அளிக்கக் கூடாது.

8. மருத்துவர் உங்கள் குழந்தைகளைக் குறித்த அனைத்து விஷயங்களையும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என நினைப்பதில் நியாயம் இல்லை. நாமே பழைய மருந்து சீட்டுகள், குறிப்புகள், வேறு மருத்துவரிடம் சென்றிருந்தால் அந்த தகவல்கள் போன்றவற்றைத் தயாராய் வைத்திருக்க வேண்டும்.

ஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை, அதே போன்ற ஒரு நோய்க்காக இன்னொரு குழந்தைக்கு வழங்கக் கூடாது. நோயின் அறிகுறிகள் ஒன்றாய் இருந்தாலும் உண்மையில் வேறு நோயாய் இருக்கலாம். மருத்துவரை அணுகாமல் ஒருவருக்கு தரப்பட்ட மருந்தை இன்னொருவருக்காய் பயன்படுத்தக் கூடாது.

9. மருத்துவரிடம் மருந்தின் பெயர், எத்தனை முறை வழங்க வேண்டும், எத்தனை நாள் கொடுக்க வேண்டும், உணவுடன் கொடுக்கலாமா, ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா, மருந்து வேலை செய்கிறது, நலமடையத் துவங்கியதும் மருந்தை நிறுத்தலாமா என அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

10. வேறு ஏதாவது மருந்தை குழந்தைக்குத் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகிறீர்கள் எனில் அதையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

சிறு சிறு நோய்கள் வரும்போதெல்லாம் பெரும்பாலும் பெற்றோரே மருத்துவராய் மாறி குழந்தைகளுக்கு மருந்துகளை வழங்கி விடுகின்றனர். அதற்குக் காரணம் அலட்சியமாகவோ, அல்லது சோம்பலாகவோ இருக்கலாம்.

இத்தகைய பிழைகள் தரும் விளைவுகள் வாழ்நாள் காயங்களை உருவாக்கிவிடக் கூடும் என்பதை உணர்ந்து கவனமுடன் இருத்தல் அவசியம்

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........


குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்ட விடமால் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணை இதோ...

* பிசிஜி - பிறப்பின் போது
* ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) - பிறப்பின்போது
* ஹெபடைடிஸ் பி (2) - 4 வாரங்கள்
* டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 8 வாரங்கள்
* டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 12 - 20 வாரங்கள்
* டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 18-20 வாரங்கள்
* அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) - 8-9 மாதங்கள்
* சின்னம்மை (விருப்பத்துடன்) - 12-18 மாதங்கள்
* எம்எம்ஆர் - 15-18 மாதங்கள்
* எச்ஐபி (பூஸ்டர்) - 15-18 மாதங்கள்
* டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) - 18-24 மாதங்கள்
* ஹெபடைடிஸ்-ஏ மருந்து (விருப்பம்) - 2 ஆண்டுகள்
* டைபாய்டு ஊசி - 3 ஆண்டுகள்
* டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) - 5 ஆண்டுகள்
* ஹெபடைடிஸ் - ஏ மருந்து (விருப்பம் - 5 ஆண்டுகள்
* எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம்எம்ஆர் கொடுக்காவிட்டால்) - 5 ஆண்டுகள்
* வாய்வழியாக டைபாய்டு - 8 ஆண்டுகள்
* வாய்வழியாக டைபாய்டு - 9 ஆண்டுகள்
* டெட்டானஸ் - 10 ஆண்டுகள்
* சின்னம்மை தடுப்பூசி - 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)
* டைபாய்டு வாய்வழியாக - 12 ஆண்டுகள்
* டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) - 16 ஆண்டுகள்

அப்பா செல்லங்களுக்கு அறிவாற்றல் அதிகம்!



தந்தையுடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், கூர்மையான அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.லண்டன் நியூகாஸ் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு நடத்தினர். பிரிட்டனைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 11 ஆயிரம் பேரிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பெற்றோர்களுடன் சேர்ந்து வாழும் குழந்தைகளுக்கு அறிவாற்றல் அதிகமாக இருந்தது.
அதிலும் குறிப்பாக தந்தையருடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ எனப்படும் கூர்மையான அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பது தெரியவந்தது.இதில், மற்றொரு முக்கிய அம்சம். பெரும்பாலும் ஆண் குழந்தைகள் அம்மாவிடமும், பெண் குழந்தைகள் அப்பாவிடமும் அதிக அன்புடன் ஒட்டிக்கொள்கின்றன என்பதும் தெரியவந்தது.எனவே, அலுவலகம், பணம் என ஓடிக்கொண்டே இருக்கும் ஆண்கள், தங்கள் குடும்பத்தினருக்கும் நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடவேண்டும்.இது, குழந்தைகளின் அறிவாற்றலுக்கு வழிவகுக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

நாம் உணவு உட்கொள்ளும் போதுசில அடிப்படைவிதிகள்


காட்டிற்குள் வாழும் மிருகங்கள் அவற்றிற்குத் தேவையான உணவுகளை மட்டும் உண்டு நீண்ட காலம் நோயில்லாமல் வாழ்ந்து வருகின்றன. ஆனால் மனிதன் மட்டும் தனது நாக்கின் சுவைக்காக அளவுக்கதிகமான உணவை உட்கொண்டு உடலின் செயல்பாட்டையே மாற்றி வைத்து விட்டான். நோயையும் உருவாக்கிக் கொண்டு விட்டான்.
நம் உடல் இயக்கத்துக்குத் தேவையான ஒவ்வொன்றையும் உடலே சில உணர்வுகளால் அறிவிக்கிறது. அந்த உணர்வுகளை நாம் அலட்சியப்படுத்துவதன் விளைவே நோய்களின் துவக்கமாகி விட்டது. உடலின் இயக்கத்திற்குத் தேவையான உணவு தேவைப்படும் போது பசி எடுக்கிறது. தண்ணீர் தேவைக்குத் தாகம் ஏற்படுகிறது. இதே போல் அந்தத் தேவைகளின் நிறைவுகளையும் சில ஒலிகளின் மூலம் உணர்த்தி விடுகிறது. இந்த உணர்வுகளையும் அறிவிப்புகளையும் நாம் உணர்வதில்லை என்பதை விட உணர்ந்திட விரும்புவதில்லை என்பதே உண்மை.
இந்த உடல் இயக்கத்திற்குத் தேவையான உணவு உண்ணுவதற்காகவும் கழிவை வெளியேற்றுவதற்காகவும் ஒவ்வொரு மனிதனும் கீழ்காணும் சில அடிப்படை விதிகளை மட்டும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
1. நாம் உணவு உட்கொள்ளும் போது உணவை கையில் அள்ளிக் கொள்ளும் அளவை (ஒரு கவளம்) நன்றாக வாயில் வைத்து மென்று விழுங்க வேண்டும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும்படி மெதுவாக சுவைத்து உண்ண வேண்டும். இப்படி 25 முதல் 30 முறை உணவு உட்கொள்ளும் பொழுது வயிற்றுக்குத் தேவையான உணவு கிடைத்தவுடன் ஒரு ஏப்பம் வரும். இந்த ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வயிறு நிறைந்து விட்டது என்பதற்கான அறிவிப்புதான் இந்த ஏப்பம் எனும் ஒலி. இந்த ஒலியைக் கவனிக்கும் நோக்கமும், உணவை உட்கொள்ளும் நோக்கமும்தான் இருக்க வேண்டும். சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி கேட்பது, புத்தகங்கள் வாசிப்பது போன்றவைகளைத் தவிர்க்க வேண்டும்.
2. நாம் உண்ணும் உணவின் வெப்பநிலை உடலின் வெப்பநிலைக்குச் சமமாக இருக்க வேண்டும். அதாவது உணவை மென்று விழுங்கும் போது அதைச் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ நாம் உணரக் கூடாது.
3. நாம் அனைத்து உணவுகளையும் வேகவைத்தோ அல்லது சூடுபடுத்தியோ பயன்படுத்தி வருகிறோம். எனவே காய்கறி, பழங்கள் போன்றவற்றை அப்படியே பச்சையாகச் சாப்பிடுவதைத் தவிர்த்து அதை நீராவியில் இலேசாக வேக வைத்துச் சாப்பிட வேண்டும்.
4. தண்ணீரை அளவுக்கதிகமாக லிட்டர்கணக்கில் குடிப்பதையும் அடிக்கடி குடிப்பதையும் நிறுத்த வேண்டும். தாகம் எடுக்கும் போது மட்டுமே அளவாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
5. ஒருவேளை உணவிற்கும் அடுத்த வேளை உணவிற்கும் குறைந்தது நான்கு மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். இந்த இடைவெளி நேரத்தில் தாகத்திற்காகத் தண்ணீர் குடிக்கலாம். நொறுக்குத் தீனி, காபி, டீ போன்றவற்றை சாப்பிடக் கூடாது.
6. மலம் கழிக்கும் போது அதை முழுமையாக வெளியேற்றி விட வேண்டும். அது வெளியேறும் போது சிறிது எரிச்சல் உணர்வும், சிறிது கருமை கலந்த நிறமும் இருந்தால் இறுதி மலம் வெளியேறி விட்டது என்று உணர்ந்து கொள்ள முடியும்.
- இந்த ஆறு விதிகளை நாம் கடைப்பிடித்து வந்தால் உடலுக்கு உண்ணும் உணவால் வரும் அனைத்து நோய்களிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள முடியும்.
இதுபோல் நம் மனம் ஏதாவது ஒரு விசயத்தை விடாமல் பிடித்துக் கொள்கிறது. அந்த விசயத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல் கடினமாக்கிக் கொள்ளும் போது மனம் சஞ்சலப்படுகிறது. இது நம் மனத்தைப் பாதிப்பதுடன் நம் உடலையும் சேர்த்துப் பாதிக்கிறது. மனத்தை நம் உணர்வுகளைச் சமமாகப் பாவிக்கவும், அதற்காகக் கவலைகளை உருவாக்கிக் கொள்ளாமலிருக்கவும் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம் ஆழ்மனத்திற்கு மருந்துகள் ஏதுமில்லாமல் மூன்று விதமான மனப்பயிற்சி அளித்து நோய்களைக் குணப்படுத்த முடியும். பொதுவான உடல் நலத்திற்கு ஒரு மனப்பயிற்சியும், உடல் வலிகளுக்கு ஒரு மனப்பயிற்சியும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு ஒரு மனப்பயிற்சியும் என்று மூன்று விதமான மனப்பயிற்சிகளை செய்வதன் மூலம் பல நோய்களிலிருந்து நாம் விடுபட முடியும்.
வாழும் தாய் மருத்துவம், ஆழ்மன மருத்துவ ரகசியம் எனும் என்னுடைய இரண்டு தொழில்நுட்பங்களை இரட்டை மாமருத்துவம் எனும் பெயரில் அனைவரும் கடைப்பிடித்தால் நோயில்லா வாழ்வைப் பெற முடியும். மேலும் இந்த மருத்துவத்தால் கீழ்காணும் பயன்களையும் அடைய முடியும்.
1. உணவுச் செலவு மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து விடுகிறது.
2. பணச் செலவில்லாத உணவுமுறை, மனப்பயிற்சி போன்றவைகளைச் செய்து வருவதால் மருந்து, மாத்திரை போன்ற தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

குழந்தைகளுக்கு வரும் மன அழுத்தங்கள்


குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன;
1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.
2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.
3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்
4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்
5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு
6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்
7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்
8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்
9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்
10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்
11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.
12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.
- இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியவை
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;
1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.
2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.
3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.
5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.
- இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.
மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்
1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.
2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.
3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.
5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.
6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.
7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.
9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.
11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.
13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.
15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.
16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.
17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.
18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.
19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.

பெற்றோர்களே... விடலைகளை விட்டுப் பிடியுங்கள்



விடலைப் பருவத்தில் (Teen Age) உள்ள குழந்தைகளை சமாளிப்பது என்பது சாதாரண செயல் அல்ல. அதற்கு நிறைய பொறுமையும், சகிப்புத்தன்மையும், விடாமுயற்சியும் தேவை. குழந்தைப் பருவத்தில் இருந்து விடலைப் பருவத்திற்குள் நுழையும் மகனுக்கோ அல்லது மகளுக்கோ உடல், பலவிதமான இரசாயன மாறுதல்களுக்கு உள்ளாகிறது. உள்ளமோ பலவிதமான உணர்ச்சித் தாக்குதலைத் தூண்டுகிறது. இவற்றை சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் நடவடிக்கையில், பேச்சில், நடை, உடை பாவனைகளில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இந்த மாறுதலை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புதிய சூழ்நிலையை எதிர்கொள்ள பெற்றோரும் தங்களை தயார்செய்து கொள்வது அவசியம்.
பெற்றோர்களே... விடலைகளை விட்டுப் பிடியுங்கள்
• விடலைப் பருவத்தில் இருக்கின்ற குழந்தைகள் சற்று குழப்பான மனநிலையில் காணப்படுவார்கள். அவர்கள் சுதந்திரமாக எல்லா வேலைகளையும் செய்து கொள்ள வேண்டும் என்று சில நேரங்களில் விரும்புவார்கள். பெற்றோர்களின் தலையீடு இருந்தால் ஆத்திரம் கொள்வார்கள். ஆனால் அவர்களது உடலும், உள்ளமும், போதுமான அளவிற்குப் பக்குவப்படாத காரணத்தினால் பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் இன்னும் தேவைப்படும். எனவே இது போன்ற சில நேரங்களில் அவர்கள் பெற்றோரைச் சார்ந்திருப்பதும் உண்டு.
• நேற்று தனியாகவே கோவிலுக்குச் சென்றுவர ஆசைப்பட்ட பெண், இன்று ஏன் தன்னையும் அழைக்கிறாள் என்று அம்மாக்கள் குழம்பவோ, சந்தேகப்படவோ, அதிர்ச்சி அடையவோ தேவையில்லை. நேற்று இருந்த மனநிலை அவள் யாருடைய உதவியும் இல்லாமல் தானே தனது வேலைகளை செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால் இன்றோ இன்னும் அம்மாவின் துணை அல்லது அரவணைப்பு தேவை என்று நினைக்கிறது, அவ்வளவுதான். இத்தகைய சிறுமாற்றங்களும், தடுமாற்றங்களும் அந்த வயதில் இயற்கையானது தான் என்பதை பெற்றோர் உணர்ந்து கொண்டு, தங்கள் பிள்ளைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பெற்றோர்கள் செயல்பட்டால் வீணாண சச்சரவுகளும், குழப்பங்களும் நீங்கும்.
• பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சுயமாக செயல்படவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்களுடைய பாதுகாப்பு குறித்தும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். தங்களுடைய கனவை நிஜமாக்கும் விதமாக சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படித்துப் பட்டம் பெறவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் விடலைப் பருவத்தினருக்குத் தனியாகவே சில கற்பனைகள் இருப்பது உண்மை, அவற்றை மறந்து விடக்கூடாது. அதையும் மனதில் வைத்து பெற்றோர் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது அவசியம்.
• குழந்தைகளின் மனஉணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலமாக விடலைப் பருவத்தில் உள்ளவர்களுடன் பெற்றோர் அன்பான, சுமுகமான நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். இல்லை என்றால் எலியும் பூனையும் போல முகத்தை தூக்கி உர்ரென்று வைத்துக் கொண்டு, தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டுபிடித்து சச்சரவில், ஈடுபட்டு, மனநிம்மதியைத் தொலைக்க வேண்டி வரும்.

விடலைகள் மனத்தில் இடம் பிடிக்க...
• வீட்டில் அவர்களுக்கு என்று சிறுஅறையை தனியாக ஏற்படுத்திக் கொடுங்கள். அல்லது ஒரு இடத்தை விடலைப் பருவத்தில் உள்ள மகனுக்காக உண்டாக்கி வையுங்கள். அவர்களுடைய அறைக்குள் நுழையும் போது அதிரடியாக நுழையாமல் கதவைத் தட்டிவிட்டு நுழையுங்கள். அவர்கள் இல்லாத நேரங்களில் அவர்களுடைய அறை, மேசை இழுப்பு, புத்தகப்பை, மணிபர்ஸ் , டைரி ஆகியவற்றை சோதனையிடாதீர்கள். அவர்களை உங்கள் குடும்பத்துப் பெரியவர்களை நடத்துவதைப் போலவே நடத்துங்கள். சிறிய வேலைகளுக்கு அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். அவர்களுடைய தனிமையில், அல்லது சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்.
• நேரம் கழித்து வீட்டிற்கு வரும் பெண்ணிடம், எங்கே சுற்றினாய் ? யாருடன் இருந்தாய் ? கொஞ்சமாவது பெற்றோரிடம் பயம் இருக்கிறதா ? என்று குற்றவிசாரணை செய்யாதீர்கள். நாசூக்காக விசாரியுங்கள். உள்ளே நுழைந்ததும் கேள்விக்கணைகளை தொடுப்பது, அவர்களை சந்தேகப்படுவது, குற்றவாளியைப்போல விசாரிப்பது ஆகியவற்றை விடலைப்பருவத்தினர் விரும்ப மாட்டார்கள். மேலும் அவ்வாறு தங்களை அவமதிக்கும் பெற்றோரை அவர்கள் வெறுக்கவும் ஆரம்பிக்கின்றனர்.
• அவர்களுக்கு ஈடுபாடுள்ள விஷயத்தை ரசிப்பதற்கு நீங்களும் ஆர்வம் காட்டுங்கள். உதாரணமாக உங்கள் மகன் மைக்கேல் ஜாக்சன் இசையை விரும்பினால், இந்த காட்டுமிராண்டி இசையை கேட்டால் காது கிழிந்து விடும் என்று கமெண்ட் அடிக்காதீர்கள். அந்தக் காலத்தில் என்று ஆரம்பித்து உங்கள் ரசனையைப் பற்றி புகழ்ந்து பேசி போரடிக்காதீர்கள். காலம் மாறுகிறது என்பதை கவனத்தில் வையுங்கள்.
• உங்கள் மகளுக்கு விளையாட்டில் விருப்பம் இருந்தால், படிக்கிற வேலையைப் பார், நீ என்ன பெரிய சானியா மிர்சாவாகவா போகிறாய் ? என்று அவளுடைய கனவுகளை கொழுந்திலேயே கிள்ளாதீர்கள். அவள் விளையாடுவதை வேடிக்கை பாருங்கள். உங்களுக்கு அதைப் பற்றித் தெரியாதபோது, இப்படிச் செய் அப்படிச் செய் என்று அறிவுரை வழங்காதீர்கள்.
• அவர்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒன்றாக அமர்ந்து கண்டு களியுங்கள். இதைப் போய் ரசிக்கிறாயே, என்ற ரீதியில் பேசாதீர்கள். உங்களுடைய வேலையைப் பற்றியோ அல்லது உங்கள் மகனின் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவைப் பற்றியோ ஜாலியாகப் பேசுங்கள். உங்கள் விடலைப் பருவ நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு உங்கள் மகனிடமோ அல்லது மகளிடமோ மனம் திறந்து பேசுங்கள். இப்போது எப்படியெல்லாம் மாறிவிட்டது என்பதை நகைச்சுவை உணர்வோடு எடுத்துச் சொல்லுங்கள்.
• நான் பெரிதாக மீசை வைத்துக் கொள்ள ஆசைப்பட்டபோது, என்னுடைய அப்பா எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது, நீ விருமாண்டி மீசை வைத்துக் கொள்வதைப் பற்றி ஆட்சேபணை இல்லை என்று உங்கள் மகனிடம் சிரித்துக் கொண்டே கூறுங்கள். இதனால் தலைமுறை இடைவெளி சடால் என்று குறைவதைப் பார்க்கலாம்.
• இருவருமே விரும்புகின்ற கலை நிகழ்ச்சிக்கோ அல்லது திரைப்படத்திற்கோ உங்கள் மகனுடன் அல்லது மகளுடன் சில மாதங்களுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். இதனால் இருவருக்கும் இடையே உள்ள நட்பு பலப்படும்.
• உங்கள் மகனையோ அல்லது மகளையோ விரும்புவதை மனதிலேயே பூட்டி வைத்துக் கொள்ளாமல் வாய்ப்பு கிடைத்தபோது வார்த்தைகளில் வெளியிடுங்கள். அவர்கள் சிறிய வேலை செய்தாலும் பாராட்டுங்கள். உடை நன்றாக இருந்தால் உண்மையான மனநிறைவோடு பாராட்டுங்கள். பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கின்றவர்களை நண்பர்களாகக் கருதி, அதிக நேரத்தை அவர்களுடன் செலவிடுங்கள்.
அவர்கள் பெரும்பாலும் தங்கள் நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பதைத்தான் விரும்புவார்கள். அதையும் மீறி அவர்கள் உங்களுடன் இருப்பதை விரும்பினால் உங்கள் செயலில் நீங்கள் வெற்றிஅடைந்து விட்டீர்கள் என்பது பொருள். இவ்வாறு விடலைப் பருவத்தில் உள்ள மகனின் அல்லது மகளின் மனதில் நீங்கள் ஒரு நல்ல இடத்தைப் பெற்று விட்டதற்காக உங்களை நீங்களே தோளில் தட்டிப் பாராட்டிக் கொள்ளலாம்

உங்கள் குழந்தைகள் உங்களை விரும்ப வேண்டுமா?


உங்கள் குழந்தைகள் உங்களை விரும்ப வேண்டும் என்று உங்கள் மனத்திற்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். இதற்காக நீங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டாம். இந்தக் காட்சியைப் படித்துப் பாருங்கள்.
எட்டாம் வகுப்பில் படிக்கின்ற விமலா பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசும் பெறுகிறாள். தன் வெற்றியை பகிர்ந்து கொள்ளவும், பாராட்டுக்களை கேட்கவும் அவரசமாக வீட்டிற்கு ஓடி வருகிறாள்.
வீட்டில் விமலாவின் பெற்றோர் இருக்கின்றனர். அம்மா, சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கும் போது விமலா உள்ளே நுழைகிறாள்.
அம்மா அம்மா இதோ பாருங்க, எனக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு என்று கத்திக் கொண்டே வந்து அம்மாவை கட்டிக் கொள்கிறாள்.
என்ன பரிசு ? என்கிறார் அப்பா, ஷேவ் செய்து கொண்டே.
இதோ இந்த பிளாஸ்டிக் டப்பா என்று பெருமை பொங்க தன் கையில் இருக்கும் டப்பாவைக் காட்டுகிறாள் விமலா.
போயும் போயும் இந்த பிளாஸ்டிக் டப்பாவுக்கா நீ இத்தனை நாள் கஷ்டப்பட்டு உழைச்சே, வெட்டி வேலை என்கிறார் அப்பா, கிண்டலான சிரிப்போடு.
இதனோட விலை பத்து ரூபா இருக்குமா? இது மாதிரி எங்கிட்ட பத்து டப்பா இருக்கு, இதுவா முதல் பரிசுக்கு கொடுப்பாங்க என்கிறாள் அம்மா.
விமலாவின் திறமை, உழைப்பு, ஆர்வம், விடாமுயற்சி, போட்டியில் பெற்ற வெற்றி ஆகிய எதுவுமே பெற்றோர்களின் கண்ணுக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் முதல் பரிசுக்காக கொடுக்கப்பட்ட பொருளின் விலை மட்டுமே. பாசத்தையும், பாராட்டையும் எதிர்பார்த்த விமலாவின் பிஞ்சு நெஞ்சம் நொறுங்கும்; சத்தம் உங்களுக்குக் கேட்கிறதா?
விமலாவின் பெற்றோரைப் போல நடந்து கொள்வது மிகவும் தவறு. நமது குழந்தை பெற்ற வெற்றிதான் முக்கியமே தவிர, பரிசுப் பொருளின் விலை முக்கியம் அல்ல. அது போல பல பிளாஸ்டிக் டப்பாக்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கும். ஆனால் அவை காசு கொடுத்து வாங்கியவையே தவிர, வெற்றி பெற்று ஈட்டியவை அல்ல. பலமுனைப் போட்டியை சமாளித்து பரிசு வாங்கி வரும் குழந்தையைக் கொண்டாட வேண்டும், பாராட்ட வேண்டும், பலரிடமும் சொல்லி பெருமைப்பட வேண்டும். இதையே குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு நடந்து கொள்ளும் பெற்றோரையே குழந்தைகள் பெரிதும் விரும்புகின்றனர்.
இப்போது சொல்லுங்கள் நீங்கள் இப்படி நடந்து கொள்ள விரும்புகிறீர்களா? உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள். வெற்றி பெற்று வரும் குழந்தையை பாராட்டுங்கள். சற்று அளவிற்கு அதிகமாகவே இருந்தாலும் கவலையில்லை. அது உங்கள் குழந்தைதானே.
இது என்ன பெரிய வெற்றி? உனக்கு நான் எழுதிக் கொடுத்தேன். அப்பா பக்கத்திலே இருந்து பலமுறை படிக்க வைத்தார். அப்படியும் ஜெயிக்கலைன்னா நீ தண்டம், மகா மக்கு என்ற ரீதியில் குழந்தைகளிடம் பேசாதீர்கள். நீங்கள் எழுதிக் கொடுத்தது சரிதான், உங்கள் குழந்தைக்கு நீங்களே முயற்சி எடுக்காத போது, வேறு யார் முன் வந்து உதவி செய்வார்கள். ஆகவே அதை சொல்லிக் காட்டுவது சரியல்ல. இவ்வாறு நீங்கள் உடன் இருந்து உழைத்தும் உங்கள் குழந்தைக்கு வெற்றி கிடைக்காவிட்டால்? என்ன ஆகியிருக்கும்.
என் உழைப்பை எல்லாம் வீணாக்கி விட்டாய், எனது பொன்னான நேரத்தின் அருமை தெரியாதவள் நீ. நான் மட்டும் நீ எக்கேடு கெட்டுப்போ என்று நினைத்து என் வேலையைப் பார்த்திருந்தால் இந்த நேரத்தில் இரண்டு ஜாக்கெட் தைத்திருப்பேன் என்று புலம்பி இருப்பீர்கள் அல்லவா?

ஆகவே குழந்தையின் வெற்றியில் உங்களுக்குப் பங்கு இருப்பதை சுட்டிக் காட்டாதீர்கள். அதற்காக பழி தீர்த்துக் கொள்ளுவதைப் போல அந்த வெற்றியை குறைத்து மதிப்பிடாதீர்கள். வெற்றியின் விலையை பரிசுப் பொருளின் விலையை வைத்து எடை போடாதீர்கள். குழந்தைகளின் சந்தோஷத்தை, திறமையைப் பணத்தை அளவு கோலாகக் கொண்டு கணிப்பது மிகவும் தவறான செயல். எனவே அந்த வெற்றியைப் பாராட்டுங்கள். குழந்தை உங்களை மிகவும் விரும்புவார்கள். ஏனென்றால் நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதுவே திரும்பவும் கிடைக்கும் என்பதே இயற்கை விதி. இதனை மதித்து நடக்கும் பெற்றோர்களுக்கு குழந்தைகளிடையே அன்பும், பாசமும் பெருகுவது நிச்சயம்.

குழந்தைகளின் செயல்முறை அட்டவணை தயாரித்துக் கொள்ளுங்கள்
குழந்தையின் வளமான எதிர்காலத்திற்கு அடிப்படையாக அமைவது அதன் நடவடிக்கைகள் தான். சின்னச் சின்னச் செங்கல்கள் ஒன்றாகச் சேர்ந்து பிரம்மாண்டமான கட்டிடத்தை எழுப்புகிறது. அதைப் போலவே குழந்தையின் சின்னச் சின்னச் செயல்கள் தான் எதிர்காலத்தை எழுப்பும் அஸ்திவாரமாக அமைகின்றன. இதை மனதில் கொண்டு ஒரு வார காலத்திற்கு உங்கள் குழந்தையின் செயல்பாடுகளை உற்று நோக்கி குறிப்பேட்டில் குறித்து வாருங்கள். அந்த குறிப்பில் நீங்கள் அவர்களிடம் கண்ட நல்ல நடத்தைகள், அவர்களின் செயல்திறன், எந்த வேலையில் ஆர்வம் அதிகம் காட்டுகிறார்கள், எந்த வேலையைச் செய்ய முகம் சுளிக்கிறார்கள், என்பதை எல்லாம் ஒன்று விடாமல் குறிக்க வேண்டும். நீங்கள் நல்ல நடத்தை என்று எண்ணுவதையும், கெட்ட நடத்தை என்று எண்ணுவதையும் இரண்டு பகுதிகளாக பிரித்து அதன் கீழ் குறித்து வரவேண்டும்.
இந்த அட்டவணையில் உங்கள் குழந்தையின் மனவெழுச்சி, உற்சாகம், பயம், உடல் நலம், சேவை மனப்பான்மை, அறிவுத்திறன், சமூக அக்கறை , உடல்வலு போன்ற பலதரப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் அவர்கள் செயல்கள் அமைந்திருப்பது ஒருவார காலத்திற்குப் பிறகு தெரிய வரும். உங்கள் செல்லப்பெண் எதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்? உங்கள் மகனின் நடத்தையில் ஆசிரியரை எரிச்சல் ஊட்டிய செயல் எது? வீட்டில் இருப்பவர்களிடம் அவன் பாசமாக இருப்பதை காட்டும் நிகழ்ச்சி எது? உங்கள் குட்டிப்பெண் செய்த எந்த செயல் சரியானது? அல்லது மாற்றப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்ற செயல் எது? குழந்தைகள் மிகவும் விரும்பியது எது? மிகவும் வெறுத்தது எது? போன்ற பல செயல்களை அந்த அட்டவணை காட்டும்.
இந்த அட்டவணையைக் காய்தல் உவத்தல் அதாவது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டு தயார் செய்ய வேண்டும். ஏன் என்றால் நமது குழந்தை எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அவ்வாறு அவர்களை வடிவாக்கம் செய்ய இந்த அட்டவணைதான் அஸ்திவாரமாக அமைகிறது. எனவே மிக முன்ஜாக்கிரதையுடன் இந்த அட்டவணையைத் தயாரித்தால், ஒரு புறம் அவர்களது நல்ல குணங்களும், மறுபுறம் மாற்றம் காணவேண்டிய குணங்களும் இருப்பதை அறியமுடியும்.

குழந்தைகளை வளர்க்க 12டிப்ஸ்கள்;




உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,
ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.
பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,
மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.
தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.
இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.
இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.
உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.
பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.
1. இளமையில் கல்வி
இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.
2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்
நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.
3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்
குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.
4. உறுதியாக இருத்தல்
பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.
அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.
5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்
பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.
உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.
மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.
தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.
6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்
குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.
அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!
7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்
தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.
8. மன்னித்து விடுங்கள்
குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.
9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்
நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.
10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்
சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.
இறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.
அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.
இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்
உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.
இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.
இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
12. கீழ்ப்படிதல்
பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!
தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!
முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.
இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.
மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.